GuidePedia

0


அகத்திய மாமுனிவர் மற்றும் தேரையர் சித்தர் தவம் புரிந்த புண்ணிய பூமியான தோரணமலை திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகில் இருக்கிறது. இந்த மலையில் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார்.

தல சிறப்பு: சித்தரான தேரையர் தவம் புரிந்ததால், இம்மலையை "தேரையர் மலை' என்று கூறுகின்றனர். இச்சாலையில் வாகனங்களில் செல்லும் போது தோரணமலை உடன் வருவது போலவும், மலை உச்சியில் இருந்து வெளியேறும் பாறையில் வழிந்தோடும் சுண்ணாம்பு கலவை "தாடி'யுடன் தேரையர் சித்தர் தவம் இருப்பது போல் தோரணையாக தோற்றமளிப்பது வேறெங்கும் காணாத அற்புதம்.

குமரன் பெருமை: "குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்' என்பதற்கு ஏற்ப, தோரணமலை உச்சியில் முருகன் குடி கொண்டுள்ளார். தோரணமலை அடிவாரத்தில் இருந்து மலைக்கு 998 படிக்கட்டுக்களை கடந்து செல்ல வேண்டும். மலை ஏறும்போது தென்றலுடன் கலந்து வரும் மூலிகை காற்று மனதுக்கு இதமாகவும், அரோகரா கோஷம் மலை ஏற்றத்துக்கு பதமாகவும் இருப்பதை அனுபவ ரீதியாக உணர முடியும். அடிவாரத்தில் இருந்து 45 நிமிடங்களில் முருகன் கோயிலை அடையலாம்.

வற்றாத சுனைகள்: தோரணமலையில் 65 விதமான வற்றாத சுனை ஊற்றுகள் இருக்கின்றன. இதில் முக்கியமான சுனை ஊற்று முருகன் கோயில் அருகில் உள்ளது. ஊற்றில் தீர்த்தமாடிய பின் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆழமான சுனை ஊற்றில் கோடையிலும் தண்ணீர் வற்றுவதில்லை. மூலிகை குணம் நிறைந்த, இச்சுனை ஊற்று நீரை பருகி வர நோய்கள் குணமாகும் என்கிறார்கள். தோரணமலையில் சித்தர்கள் தவம் புரிந்த இடங்களில் பக்தர்கள் அமர்ந்து தியானம் செய்கின்றனர். சுவாமி தரிசனத்துடன் தியானமும் நடப்பது தோரமணமலையில் மட்டுமே. இங்குள்ள முருகனுக்கு அனைத்து நாளும் விழாக்கோலம் தான்.குன்றாத செல்வம், குறைவில்லாத கல்வி, வளமிக்க வாழ்வு தரும் தோரணமலை முருகனை வழிபடுவோம்.

இருப்பிடம்: தென்காசியில் இருந்து அம்பாசமுத்திரம் ரோட்டில் 20 கி.மீ., தூரத்தில் மாதாபுரம். இங்கிருந்து பிரியும் பாதையில் 5 கி.மீ., சென்றால் தோரணமலை. 
திறக்கும் நேரம்: காலை 11.30- 1.30
அடிவாரக்கோயில்: காலை 7.00 - மாலை 6.00
போன்: 99657 62002.

Post a Comment

 
Top
Related Posts Plugin for WordPress, Blogger...