
மகாபலி மன்னன் இப்போது செல்வந்தன் அல்ல. அவன் இருப்பதையெல்லாம் இழந்து விட்டவன். திருமாலிடம் அனைத்தையும் தானம் செய்து பெரும்பேறு பெற்று, அவரது திருவடியால் அழுத்தப்பட்டு, பாதாள லோகத்துக்கு போய்விட்டவன். நாரதரைக் கண்டதும் சுயரூபமடைந்து அவரை வரவேற்றான். மகாபலி! உன் வரவேற்பு பலமாகத்தான் இருக்கிறது. ஆனால், இந்த வரவேற்பு ஏதோ செயற்கையாகத் தோன்றுகிறது. உன் முகத்தில் கவலை ரேகை தெரிகிறது. உன் குல குரு சுக்ராச்சாரியாரின் சொல்லைக் கேட்காமல் திருமாலிடம் எல்லாவற்றையும் இழந்ததை எண்ணி கவலையில் இருக்கிறாயோ? என்றார் நாரதர். சிவசிவ என்ற மகாபலி, மாமுனிவரே! இந்தச் சொல் உமது வாயில் இருந்து வந்ததால், பிழைத்தீர். வேறு யாரேனும் சொல்லியிருந்தால் அவர் தலையை வாங்கியிருப்பேன். மகாபலி என்றும் தர்மத்தின் தலைவன் தான். கொடுத்ததை நினைத்து வருந்துவது, நாடு போனதற்காக வருத்தப்படுபவன் அல்ல. ஆனால், என் வருத்தமெல்லாம், நான் இறைவனிடம் அத்தனையையும் தாரைவார்த்தேன் என்பதை எண்ணிப்பாராமல், என் இன்றயை ஏழ்மையை சிலர் ஏளனம் செய்கிறார்கள். குறிப்பாக தேவர் தலைவர் இந்திரன் சில நாள் முன்பு இங்கு வந்தான். அவன் என் நிலையைப் பார்த்து வருந்துபவன் போல் கேலி செய்தான். அதை நினைத்து தான் வருந்துகிறேன், என்றான். நாரதர் அவனிடம், மகாபலி! இந்திரனைப் போல் உன்னைக் கேலி செய்வது என் நோக்கமல்ல. பரந்தாமனிடம் பொன்னையும் கொடுத்து, உன்னையும் கொடுத்த உத்தமன் நீ. என்னை இந்திரனோடு ஒப்பிடாதே. உன் கோபத்தை கிளறும் வகையில் பேசவேண்டிய அவசியமும் எனக்கில்லை. ஏனெனில், நான் ஒரு முனிவன். ஆசைகளைத் துறந்தவன். சரி...போகட்டும். இந்திரன் அப்படி என்ன தான் சொன்னான்? என்றார். மாமுனிவரே! அந்த இந்திரன் சிலநாள் முன்பு பாதாளலோகத்திற்கு வந்தான்.
நான் அப்போது எலி வடிவில் சுற்றிக்கொண்டிருந்தேன். என்னை அடையாளம் கண்டு கொண்ட அவன் மகாபலி! நீ என்னையே வென்றவன். இந்திரலோகத்தையும் ஆண்டவன். உன்னைக் கண்டு பயந்து, நான் வேணுவனத்தில் (மூங்கில்காடு) ஒளிந்திருந்தேன். சிவனின் அருளால் தப்பினேன். அந்தளவுக்கு பராக்கிரமசாலியான நீ, இப்போது இப்படி கூனிக்குறுகி எலியாக மாறியிருப்பதைப் பார்த்தால் எனக்கு வருத்தமாக இருக்கிறது. உனக்கா இந்த நிலை வர வேண்டும் என இரக்கப்படுவது போல் ஏளனம் செய்தான். அப்போது என் உடலில் இருந்து ஒரு பெண் வெளிப்பட்டாள். அவள் தேவதை போல் ஜொலித்தாள். அவள் என்னிடம், மகாபலி! நான் தான் திருமகள். நீ தானத்தில் சிறந்தவன் என்றாலும், மமதை காரணமாக உன் பொருளை இழந்தாய். இருப்பினும், நீ பரந்தாமனுக்கே தானம் செய்தவன் என்பதால், நீ பாதாளலோகத்துக்கு வந்தபிறகும் கூட உன்னிடம் இதுநாள் வரை இருந்தேன். இப்போது, இந்திரன் இப்படி உன்னை ஏளனமாகப் பேசிவிட்டான் என்பதை எண்ணி மனம் கலங்கிவிட்டாய். மமதையை விட கோழைத்தனம் கேடானது. மமதை கொண்டவனாய் இருந்தாலும், தர்மம் தவறாதவனாயும், வாக்கு தவறாதவனாயும், மக்களுக்கு அரிய சேவை செய்ததாலும் உன்னிடம் நான் இருந்தேன். அரிய செயல்கள் செய்பவன் தன்னைத் தூற்றுபவர்களைப் பற்றி கவலைப்படக்கூடாது. உயிர் போனாலும், தன் செயல்களைத் தொடர்ந்து செய்ய வேண்டும். நீயோ சிறு ஏளனச்சொல்லுக்காக மனம் கலங்கி விட்டாய். கோழையாய் மாறி விட்டாய். கோழைகளிடம் நான் தங்குவதில்லை. இதோ...இந்த இந்திரனுக்கு இப்போது நல்ல நேரம். நான் அவனுடன் இனி இருப்பேன் எனச்சொல்லி அவனுள் புகுந்தாள். இந்திரன் சந்தோஷமாகத் திரும்பினான். எனக்கு செல்வம் போனது பற்றி வருத்தமில்லை. இன்று ஒருவரிடம் இருக்கும் செல்வம் நாளை இன்னொருவருடையதாகிறது. ஆனால், என்னைக் கோழை என்று வர்ணித்தாளே திருமகள்...அந்தச் சொற்களைத் தான் தாங்கமுடியவில்லை, எனச் சொல்லி கண்ணீர் வடித்தான்.
நாரதர் அவனைத் தேற்றினார். மகாபலி! யாருமே தூஷணைக்குரியவர்கள் அல்ல. உன் கீழ் வாழ்ந்தோமே என்ற தாழ்வு மனப்பான்மையால் இந்திரன் வார்த்தைகளைக் கொட்டியிருக்கிறான். கொட்டியவர்கள் அதை அள்ளியே தீர வேண்டும். கவலைப்படாதே. லட்சுமி உன்னை மீண்டும் வந்தடைவாள், என்று வாழ்த்தினார். நாரதரை தலை தாழ்த்தி வணங்கினான் மகாபலி.நாரதர் சென்ற பிறகு மீண்டும் இந்திரன் மகாபலியிடம் வந்தான். மகாபலி! அடடா! திருமகள் என்னை வந்தடைந்த பிறகு உன் நிலைமை இன்னும் மோசமாகி விட்டது போல் தெரிகிறதே! மூவுலகத்தையும் இழந்தாய். இப்போது அருமை பெருமையெல்லாம் இழந்து எலியாய் அலைகிறாய். பாவம், பரிதாபம், என் உதவி ஏதாவது உனக்கு வேண்டுமா? என்றான். மகாபலிக்கு ஆத்திரம் அதிகமாகி விட்டது. நிஜமாகவே உபசரிப்பவர்களுக்கும், நிழல்களுக்கும் உள்ள வித்தியாசத்தை அறியாதவன் நான் அல்ல இந்திரா! அடேய்! செருக்குற்றவனே! தானம் செய்வதில் உயர்ந்தவன் என்று சாதாரணமாக செருக்கடைந்ததற்காகவே நான் பாதாள லோகத்தில் தள்ளப்பட்டேன். நீயோ, லட்சுமி தாயாரின் தற்காலிக பிரவேசத்திற்காக செருக்கடைந்து குதிக்கிறாய்.யாருக்கும் எப்போதும் நல்ல நேரமாக இருக்கும் என நினைக்காதே. கெட்ட நேரம் திடீரென தாக்கும்.அப்போது, என்னையும் விட கேவலமான நிலையை அடைவாய், என எச்சரித்தான். மகாபலியை மனம் நோக வைக்கலாம் என எண்ணி வந்த இந்திரன், நினைத்தது நடக்காமல் போனதுடன், வறுமையான நிலையிலும் மகாபலியின் ஸ்திர புத்தியை எண்ணி வியந்தான். அதே நேரம் வெட்கி தலைகுனிந்து சென்றான்.நாரதர் அவன் முன்னால் தோன்றினார்.என்ன இந்திரா! எங்கிருந்து வருகிறாய்? உன் முகத்தைப் பார்த்தால் மாபெரும் அசுர மன்னனான மகாபலியைத் தோற்கடித்தவன் போல் தெரியவில்லையே! என்ன விசேஷம்? என்றார். தான் எங்கிருந்து வருகிறோம் என்பதை அறிந்து தான் நாரதர் கேலி செய்கிறார் என்பதை இந்திரன் புரிந்து கொண்டான்.
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.