GuidePedia
Latest News

0
நாரதர் பகுதி-21
நாரதர் வானில் இருந்து கீழே இறங்கவும், அவர்கள் ஓடிவந்து காலில் விழுந்தனர். மகாமுனிவரே! உங்கள் கையில் தான் எங்கள் வாழ்வே இருக்கிறது. எங்களைக் காப்பாற்றுங்கள், என்றனர். அவர்களின் உடலில் இருந்து நாற்றம் வீசியது. ஒருவன் கையில் ஒரு எலும்புத்துண்டை வைத்திருந்தான். அதில் இருந்த சதைப்பற்றை தனியாகப் பிரித்து எடுத்துக் கொண்டிருந்தான். நாரதர் அவர்களை இன்னார் என உணர்ந்து கொண்டாலும் கூட, அடையாளம் தெரியாதவர் போல நடித்தார். யாரப்பா நீங்கள்? ஏன் என்னை வழிமறிக்கிறீர்கள்? நான் தேசாந்திரம் போய்க் கொண்டிருக்கிறேன். பாதையை விடுங்கள், என்றார். மகரிஷி! எங்களை உங்களுக்கு அடையாளம் தெரியவில்லையா? அந்தளவுக்கா நாங்கள் உருமாறி விட்டோம். நூறு வருடங்களாக நாங்கள் இந்த பேய்க்காட்டில் கிடந்து அவஸ்தைப்படுகிறோம். எங்களைக் கரைசேருங்கள், என்றனர் கண்களில் நீர் வழிய. நாரதர் அவர்களிடம், நீங்கள் இந்த சுடுகாட்டின் பணியாளர்களா? என்ன தான் சுடுகாட்டில் பணியாற்றினாலும், இறந்தவர்களின் உடலையா உண்பது? சே....என்ன அபத்தம்! இதோ! உங்களில் ஒருவன் ஏன் எலும்பில் இருந்து சதையைப் பிய்க்கிறான். உண்பதற்கு தானே? என்றார் கோபப்படுபவர் போல நடித்து. ஆமாம் சுவாமி! பசி...பசிக்கொடுமை எங்களை வாட்டுகிறது. அதனால், இந்த பிணங்களின் சதையை பிய்த்து தின்கிறோம். ஆனால், நாங்கள் விரும்பி இதைச் செய்யவில்லை. ஒரு பசு எங்களுக்கு அளித்த சாபத்தால் இவ்வாறு செய்கிறோம், என்றனர். அப்படியா? ஒரு பசுவுக்கு அவ்வளவு சக்தியிருக்கிறதா? நம்பவே முடியவில்லையே, அப்படியானால் நீங்கள் யார்? என்றார். ஐயனே! நாங்கள் அஷ்டவசுக்கள். திசைகளின் பாதுகாவலர்கள். எங்களை அனலன், அணிலன், ஆபச்சைவன், சோமன், தரன், துருவன், பிரத்யூசன், பிரபாவன் என்று அழைப்பர், என்றனர். 

நாரதர் அப்போது தான் அவர்களை அடையாளம் தெரிந்தவர்கள் போல் காட்டிக் கொண்டு, ஐயையோ, நீங்களா? உங்களுக்கா பிணம் தின்னும் இக்கதி கிடைத்தது. ஏன்? உங்கள் செல்வமெல்லாம் என்னானது? உங்கள் மனைவிமார் எங்கே? திசைக்கொரு ராஜ்யத்தை ஆண்டீர்களே! அவை எங்கே போனது? என்றார். அஷ்டவசுக்களில் முதலாமவனான அணிலன் தங்களுக்கு நேர்ந்த கதி பற்றி விபரமாக எடுத்துரைத்தான். மகா முனிவரே! எங்களில் முதல் ஏழுபேரும் எந்தத்தவறும் செய்யவில்லை. ஆனால், தவறுக்கு உடன் போனோம். எங்களில் கடைக்குட்டியான இந்த பிரபாவன், தன் மனைவி மாலினி மீது உயிரையே வைத்திருந்தான். அவள் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுப்பது தான் அவனுக்கு வேலையே. அந்தளவுக்கு அவளது அழகில் மயங்கிக் கிடந்தான். ஒருநாள் நாங்கள் மேரு மலைச் சாரலுக்குச் சென்றோம். அங்கே, ஒரு அழகிய பசு மேய்ந்து கொண்டிருந்தது. அதன் கொம்புகள் தங்கத்தால் செய்யப்பட்டிருந்தது. அதன் மேனி அதிவெண்மையாக இருந்தது. ஒரு மாசு மரு கூட இல்லை. கால் குளம்புகள் வெள்ளியால் உருவாக்கப்பட்டிருந்தன. மடுவைப் பார்த்தால் மிகப்பெரிதாக இருந்தது. அதில் இருந்து தானாகவே பால் சொரிந்து கொண்டிருந்தது. அது நின்ற இடமெல்லாம் பால்பெருகி, சிறுசிறு குளங்களை உண்டாக்கியது. பால் வழிந்ததைப் பார்த்தால், நாராயணன் பள்ளி கொண்டிருக்கும் பாற் கடல் இந்த பூலோகத்திலும் உருவாகி விடுமோ என்ற அளவுக்கு இருந்தது. இப்படிப்பட்ட அந்த பசுவின் அருகில் சென்று பார்த்தோம். அது எங்களைக் கண்டு மிரண்டது. அப்போது, மாலினி அந்தப் பசுவைப் பிடித்து வாருங்கள் என்று பிரபாசனிடம் கேட்டாள். பிரபாசனும் புறப்பட்டான். நாங்கள் அவனைத் தடுக்கவில்லை. விளையாட்டாக இருந்து விட்டோம். அவன் பசுவைப் பிடிக்கச் சென்ற போது, அந்தப்பசு பேச ஆரம்பித்தது. பிரபாசா! உன்னை யார் என நான் அறிவேன். நான் தான் தேவலோகப் பசுவான காமதேனு. இப்போது நான் முனிவர்களுக்கெல்லாம் தலைவரான வசிஷ்டரின் பாதுகாப்பில் இருக்கிறேன். 

நான் இங்கு சிந்தும் பால் அவருக்குரியது. சிவபூஜைக்கு அவர் அதைப் பயன்படுத்துவார். நீ என்னைப் பிடிக்க முயற்சிக்காதே. ஓடி விடு என்று எச்சரித்தது.மனைவி மீது கொண்ட காதலால், பிரபாசன் அது சொன்னதைக் கேட்கவில்லை. அதைப் பிடிக்க எத்தனித்தான். அதன் வாலைப் பிடித்து இழுத்தான். தலையை இறுக்கமாகப் பிடித்து, கயிறை கட்டி இழுக்க ஆரம்பித்தான். வலி தாளாமல் அலறிய காமதேனு, மூடனே! நான் சொல்லியும் நீ கேட்கவில்லை. பசுவுக்கு துன்பம் செய்பவர்கள் அது அனுபவிப்பது போல, பல மடங்கு துன்பத்தை அனுபவிப்பர். நீயும், இங்கே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் உன்னைச் சேர்ந்தவர்களும் இப்போதே காசி செல்வீர்கள். அங்குள்ள சுடுகாட்டில் எரியும் பிணங்களே உங்களுக்கு ஆகாரம் என்று சாபம் விட்டது. நாங்கள் அதிர்ந்து விட்டோம். காமதேனுவிடம் மன்னிப்பு கேட்டோம். ஆனால், அது மன்னிக்க மறுத்து விட்டது. பிரபாசன் செய்த தவறுக்கு எல்லோரும் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று ஏன் சொல்கிறாய்? வேண்டுமானால் அவனையும், அவன் மனைவியையும் தண்டித்துக் கொள். மற்றவர்களை விட்டு விடு. தவறு செய்யாத எங்களைத் தண்டிக்க காரணம் என்ன? என்றோம். அந்தப் பசுவோ, பிரபாசன் என்னைத் துன்புறுத்தும் போது, நீங்கள் அவனைத் தட்டிக் கேட்கவில்லை. தவறைத் தட்டிக் கேட்காமல், நீங்களும் வேடிக்கை பார்த்ததால், உங்களையும் சாபம் சேரும், என்றது. மீண்டும் அதனிடம் மன்னிப்பு கேட்கவே, உங்களுக்கு நான் இட்ட சாபத்தை நீங்கள் அனுபவித்தே ஆக வேண்டும். தவறு செய்பவர்கள் மன்னிக்கப்பட்டு விட்டால், பின்னர் உலகில் ஒழுங்கில்லாமல் போய்விடும். மேலும், பசுக்களுக்கு துன்பமிழைப்பவனுக்கு விடிவே கிடையாது. இருப்பினும், நீங்கள் கெஞ்சிக் கேட்பதால் ஒரு விமோசனம் தருகிறேன் என்றது. அதுதான் இப்போது நடந்திருக்கிறது, என்றான். நாரதர் அவ்விமோசனம் பற்றி கேட்க ஆவலுடன் நின்றார்.

Post a Comment

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top
Related Posts Plugin for WordPress, Blogger...