GuidePedia

0
நாரதர் பகுதி-15
நாரத முனிவரே! தாங்கள் சொல்வது எனக்கு ஆச்சர்யத்தை தருகிறது. உலகில் பாவம் செய்து இறந்த ஒருவனை நரகத்திற்கு எடுத்து செல்கிறீர். புண்ணியம் செய்தவர்கள் இங்கே வருவதே இல்லை. அவர்களை நான் பார்ப்பதும் இல்லை. அவர்கள் நேராக சிவலோகம் அடைகிறார்கள். தீயவர்களை நரகத்தில் அடைத்துவைத்து அவர்களை வேதனைப்படுத்தும் செயலை செய்யும்படி இறைவனே என்னிடம் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார். அவர்களை விடுதலை செய்யுங்கள் என சொன்னால் அது எப்படி நியாயமாகும்? அகத்தியர், கவுதமர், வசிஷ்டர் போன்ற உயர்ந்த ரிஷிகள்கூட இதுபோன்று ஒரு கோரிக்கை வைத்ததில்லை. ஆனால் சாநந்த முனிவர் இப்படி ஒரு முயற்சி எடுக்கிறார் என்றால் ஆச்சரியப்படாமல் என்ன செய்ய முடியும்? என்றான் எமதர்மன். நாரதரும் அவன் சொல்வதை ஆமோதித்தார். எமன் தொடர்ந்தான். சாநந்த முனிவர் தாராளமாக இங்கு வரட்டும். என்னிடம் பேசட்டும். நான் நடுநிலை தவறாதவன். எந்த முனிவருக்கும் அஞ்ச வேண்டியதில்லை. இறைவனின் கட்டளைப்படியே இங்கு அனைத்தும் நடந்துகொண்டிருக்கிறது. தீயவர்கள் விடுவிக்கப்பட்டால் பூலோகத்தின் நிலை என்னாகும்? இதை நான் அவருக்கு உணர்த்துவேன், என அகந்தையுடன் சொன்னான். நாரத மகரிஷிக்கு எமனின் தற்பெருமை நன்றாகவே புரிந்தது. சாநந்தர் போன்ற ரிஷிகளிடம் இவனை மாட்டி வைத்தால்தான் தன் ஆணவத்தை விடுவான் என்பதை புரிந்துகொண்ட அவர், எமதர்மனே! உன்னிடம் சொல்வதை சொல்லிவிட்டேன். சாநந்தர் வந்தால் அவரை விடாதே. கேள்வி மேல் கேள்வி கேள். உன்னை வெல்ல இந்த உலகில் யாருமே இல்லை. யாரைப்பற்றியும் கவலைப்படாதே. இறைவனின் பணியாளனான நீ யாருக்கு அஞ்ச வேண்டும்? என்று நன்றாக தூண்டிவிட்டு சென்றுவிட்டார். நாரதர் தன்னைக் கேலி செய்கிறார் என்பது புரியாமல், புகழ்வதாக நினைத்துக்கொண்ட எமதர்மன் சாநந்தரின் வருகைக்காக காத்திருந்தான்.

சாநந்தரும் வந்துசேர்ந்தார். அவரை எமன் வரவேற்றான். சாநந்தர் எமனுடன் நீண்டநேரமாக பேசிக்கொண்டிருந்தார். அவனை வாழ்த்தினார். பணிகளை பாராட்டினார். அன்பு மிக்கவனே! நான் வந்த விஷயம் பற்றி நீ கேட்கவே இல்லையே! என்றார். எமனும் மிகப் பணிவுள்ளவன் போல் நடித்து, மகரிஷியே! தாங்கள் என்ன காரணமாக இங்கு வந்தீர்கள் என்பதை என்னிடம் விபரமாகச் சொல்லுங்கள், என்றார். சாநந்தர் அவனிடம், எமதர்மா! நான் உன் ஊரைச் சுற்றிப் பார்ப்பதற்காக வந்திருக்கிறேன் என்றார். எமதர்மனே அவரை அழைத்துச் சென்றான். சாநந்தர் எமலோகத்தை முற்றிலுமாக சுற்றிப்பார்த்தார். எல்லா இடங்களையும் காட்டிய எமதர்மன் நரகத்தை மட்டும் காட்டவில்லை. அங்கே போகவேண்டும் என சாநந்தர் சொன்னார். எமன் அவரிடம், முனிவரே! தாங்கள் அங்கு செல்ல வேண்டாம். தவத்தில் உயர்ந்த உங்களின் பாதம் அந்த கொடியவர்கள் இருக்கும் இடத்தில் படக்கூடாது. இத்துடன் திரும்பிவிடுவோம். அங்கே இருப்பவர்கள் அறச்சிந்தனையே இல்லாதவர்கள். கொலைகாரர்கள், மிருகத்தனமான செயல்களில் ஈடுபட்டவர்கள். அவர்கள் அருகேயே நீங்கள் செல்லவேண்டாம். அவர்கள் கடவுளை மனதால்கூட நினைக்காதவர்கள். பூலோகத்தில் தாங்கள் செய்த கொடுமைக்கேற்ற தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பார்க்க வேண்டுமென நீங்கள் மனதில்கூட நினைக்காதீர்கள் என பணிவோடு சொன்னான். எமதர்மனே! நீ சொல்வதெல்லாம் சரிதான். ஆனால் இறைவன் என்பவன் நல்லவனுக்கும் தீயவனுக்கும் பொதுவானவன்தான். ஒரு தரப்பினர் இன்பத்தையும், மற்றொரு தரப்பினர் துன்பத்தையும் அனுபவிக்க வேண்டுமென அவன் நினைக்கவே மாட்டான். இந்த உலகில் கெட்டவர்களுக்காகவும் பிரார்த்திக்க ஒருவன் இருக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் நான் ஒரு சிவபக்தன். நான் அந்த கெட்டவர்களுக்காக நரகத்தில் இருந்தபடியே சிவபெருமானை பிரார்த்திக்கப் போகிறேன். என்னை நீ அனுமதித்துதான் ஆகவேண்டும் என அடம்பிடித்தார். எமதர்மனோ, அவரை அங்கு அனுப்ப மறுத்துவிட்டான்.

சாநந்தர் நரகத்தின் வாசலில் அப்படியே அமர்ந்துவிட்டார். தியானத்தில் மூழ்கினார். சிவாயநம என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை கோடி முறை தியானம் செய்தார். இப்படியும் இந்த உலகில் ஒரு நல்லவரா என அகம் மகிழ்ந்த சிவபெருமான், எமலோகத்திற்கே வந்துவிட்டார். சாநந்தரை எழுப்பி ஆசீர்வதித்தார். எமதர்மன் அவரது காலில் விழுந்து வணங்கினான். சாநந்தரின் கோரிக்கையை நிறைவேற்றும்படியும், கெட்டவர்களும் திருந்தி நடக்க தன் லோகத்தில் ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறி, நரகவாசிகள் அனைவரையும் அழைத்துக்கொண்டு சிவலோகம் போய்ச் சேர்ந்தார். இப்படியாக நாரதரின் கலகத்தால் பாவம் செய்து நரகம் அடைந்தவர்கள் கூட சிவபெருமானுடன் ஐக்கியமாயினர். எமலோகத்தில் இருந்து புறப்பட்ட நாரதர், சித்ரகேது என அழைக்கப்படும் மன்னனின் அரண்மனை நோக்கி வந்துகொண்டிருந்தார். மன்னன் சித்ரகேதுவுக்கு நீண்ட நாளாக குழந்தை இல்லாமல் இருந்தது. அப்போது ஆங்கிரஸ் என்ற முனிவர் அரண்மனைக்கு வந்தார். அவரது ஆசியுடன் புத்திரகாமேஷ்டி யாகத்தை சித்ரகேது செய்தான். இதன் விளைவாக அவனது மூத்த மனைவி ஹிருதத்துதி என்பவளுக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்தது. குழந்தை இல்லாமல் இருந்த காரணத்தால், பல பெண்களை  சித்ரகேது திருமணம் செய்திருந்தான். அவர்களுக்கு ஹிருதத்துதி மீது பொறாமை ஏற்பட்டது. தங்களுக்கு குழந்தை இல்லாமல் ஹிருதத்துதிக்கு மட்டும் குழந்தை இருக்கிறதே என்பதே பொறாமைக்கு காரணம். ஒரு நாள் ஹிருதத்துதியின் சக்களத்திகளில் ஒருத்தி யாரும் அறியாமல் குழந்தையைத் தூக்கிக்கொண்டு காட்டுக்குள் சென்றாள்.

Post a Comment

 
Top
Related Posts Plugin for WordPress, Blogger...