GuidePedia

0
நாரதர் பகுதி-2



உபவருக்கன் அவளைப் பார்த்தபடியே வீணை மீட்டி பாடியதில் எங்கோ இடறி விட்டது. இதை பிரமசிரேஷ்டர் கவனித்து விட்டார்.அடப்பாவி! என் யாகத்தைக் கெடுப்பதற்கென்றே வந்தவனே! நீ பக்திப்பரவசம் பொங்க பாடுவாய் என நினைத்தேன். நீயோ பாவையின் மயக்கத்தில், யாகத்தின் புனிதத்தை கெடுத்து விட்டாய். கந்தர்வகுலம் ஒழுக்கத்திற்கு பெயர் போனது. நீயோ, அக்குலத்தின் மானத்தை காற்றில் பறக்க விட்டாய். இங்கே பல முனிவர்களும், தவசிரேஷ்டர்களும் இருக்கிறார்கள். ஒழுக்கமற்ற ஒருவன் தவப்பெரியோர்களின் மத்தியில் இருந்தால், அவர்களின் தவவலிமையில் பாதி அழிந்து போகும். அந்த பாவத்தை நீ செய்து விட்டாய். இனி, நீ கந்தர்வனாக இருக்க லாயக்கற்றவன். எனவே, இப்போதே நீ மானிடப்பிறவி எடுப்பாய். இங்கிருந்து போ, என்று சாபமிட்டார். அந்தக்கணமே உபவருக்கன் அங்கிருந்து மறைந்து விட்டான். அவனுக்கு காதல் வலை வீசிய பெண் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வருத்தத்துடன் சென்று விட்டாள். விதிவசம் சிக்கிய உபவருக்கன் பூலோகத்தில் ஒரு ஏழையின் வீட்டில் பிறந்தான். அங்கும் அவனது அழுகுரல் இனிமையாக இருக்கவே, இசைசித்தன் என அவனுக்கு பெயர் சூட்டி மகிழ்ந்தனர் பெற்றோர். அவனது தந்தை அவன் பிறந்தவுடனேயே காலமாகி விட்டார். இதனால் தந்தையை விழுங்கியவன் என்ற அவச்சொல்லுக்கு ஆளானார். ஆனாலும், பெற்ற தாய் கைவிடுவாளா தன் குலக்கொடியை! அவள் ஒரு அந்தணரின் வீட்டில் வேலை செய்து, குழந்தையைக் காப்பாற்றினாள். தாய் மீது இசைசித்தன் மிகுந்த பாசம் கொண்டிருந்தான்.ஆனால், முன்வினைப்பயன் இப்போதும் இசைசித்தனைச் சுட்டது. ஆம்...அவனது தாய் தோட்டத்தில் இலை பறிக்கச் சென்றாள். அங்கிருந்த ஒரு பாம்பு அவளைத் தீண்டிவிட, அங்கேயே இறந்தாள். சிறுவன் அழுது புலம்பினான்.

அவ்வீட்டு அந்தணர் இரக்ககுணம் கொண்டவர். அவர் இசைச்சித்தனை தன் வீட்டிலேயே பணிசெய்ய வைத்துக் கொண்டார். முன்வினை காதல் விளையாட்டு இசைசித்தனை வாட்டி வதைத்தது. கடும் வேலை செய்து அவன் பிழைத்தான். அவ்வீட்டிற்கு திருமாலின் அடியவர்கள் அடிக்கடி வருவார்கள். அவர்கள் பாடும் பாடலை இசைசித்தன் ரசித்தபடியே இருப்பான். இசைசித்தன் அந்த பாடல்களை திரும்பப்பாடுவான். காலப்போக்கில் நாராயணன் மீது அவன் தனியாகவே பாடல் இயற்றி பாட ஆரம்பித்தான். அவனது குரல் அங்கு வந்த அடியவர்களை ஈர்த்தது. அந்தணரும் அவனது குரலினிமையில் மயங்கி, அவனுக்கு வீட்டு வேலைகள் கொடுப்பதை நிறுத்தி விட்டார். எந்நேரமும் பாடல்...பாடல்...பாடல். ஒவ்வொரு சொல்லுக்கும் இடையே அவன் நாராயணா...நாராயணா என இனிமையாகச் சொல்ல ஆரம்பித்தான். அவனது இந்தக்குரல் வைகுண்டத்தில் இருந்த மாதவனையும் ஈர்த்தது. லட்சுமி தாயார் அவன் நாராயணா என இனிய குரலில் அழைப்பதையும், வீணை இசையுடன் அவன் நாராயணனைப் பாடி துதிப்பதையும் கேட்டு பரவசம் கொண்டாள். திருமாலே! ஐயனே! தங்கள் பெயரை உச்சரித்தபடியே ஒரு சிறுவன் பூலோகத்தில் இருக்கிறானே. அவனை நம்மோடு வைத்துக் கொண்டால் என்ன! தங்கள் திருநாமத்தை பக்தியுடன் உச்சரிப்பவர்கள் வைகுண்டத்தில் அல்லவா இருக்க வேண்டும்! பெருமாளே! அவன் விஷயத்தில் தாங்கள் என்ன செய்யப் போகிறீர்கள், என்றாள். லட்சுமி! அவனைப் பற்றி என் மனதில் ஒரு உயர்ந்த திட்டம் இருக்கிறது. அவன் கந்தர்வ குலத்தில் பிறந்தாலும், ஒழுக்கம் தவறியமையால் பூலோகத்தில் தன் பாவத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறான். அந்தக்கட்டம் முடிந்ததும், அவன் என்னிடம் தான் வருவான். அவனை திரிலோக சஞ்சாரியாக்கி, மூவுலகத்திலும் தேவர்கள், அசுரர்கள் செய்யும் தவறுகளைத் தடுக்கப் போகிறேன். அவன் இங்கே வந்ததும் பார்...தேவலோகமே கலகலக்கப் போகிறது, என்றார்.

லட்சுமிதேவியார் மகிழ்ந்தார். நாராயணனிடம் இசைசித்தனுக்காக சிபாரிசு செய்தாள். நாராயணமூர்த்தியே! தாங்கள் அவன் விஷயத்தில் தாமதம் செய்ய வேண்டாம். அவனை உடனடியாக இங்கு வரவழையுங்கள். நாராயண நாமத்தை பக்தியுடன் உச்சரிக்கும் எல்லாருமே என் குழந்தைகள் தான். அதிலும் இந்த குறும்புக்குழந்தையை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அவன் பேசினால் இசை...நடந்தால் இசை...பாடினால் இசை...தும்மினாலும் இசை...அவன் நம்மோடு இருக்கட்டும், அவனது கானம் கேட்டு தினமும் நான் மகிழ்வேன், என்றாள். நாம் பெருமாள் கோயிலுக்கு போனால், முதலில் தாயாரைத் தான் வணங்க வேண்டும். தாயாரிடம் நமது கோரிக்கையைச் சொல்லிவிட்டால், அவள் பெருமாளிடம் சொல்லி அதை நிறைவேற்றி வைத்து விடுவாள் என்பது ஒரு நம்பிக்கை. நம் வீட்டிலேயே அப்படித்தானே! பள்ளிச்சுற்றுலா செல்ல வேண்டும் என்றால், குழந்தை முதலில் அம்மாவிடம் தான் சொல்வான். அம்மா! நீ எப்படியாவது அப்பாவிடம் அனுமதி வாங்கித்தாயேன், என்று. அம்மாவும் சமயம் பார்த்து, அப்பாவிடம் அனுமதியும், செலவுக்கு பணமும் வாங்கிக் கொடுத்து விடுவாள். குழந்தை மகிழ்வான். அதுபோல், தெய்வத்தாயாரான லட்சுமியும் நம் கோரிக்கைகளை கவனித்துக் கொள்வாள். இங்கே இசைசித்தனின் விஷயத்திலும் அப்படித்தான் நடந்தது. ஒருநாள் இசைசித்தனின் மனதில் காட்டுக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அவன் கானகம் நோக்கி நடந்தான். காட்டிற்குள் சிங்கங்களும், புலிகளும், கரடிகளும் இன்னும் கொடிய மிருகங்களும் நடமாடின. அவன் உயரமான ஒரு பாறையில் அமர்ந்தான். வைகுண்டத்தில் இருந்து இதைப் பார்த்த லட்சுமி பதைபதைத்து போனாள். நாராயணா! இது என்ன சோதனை! நான் சொன்னதென்ன! நீங்கள் செய்வதென்ன! குழந்தை இசைசித்தன் காட்டுக்குள் இருக்கிறான். அவனைச் சுற்றி கொடிய விலங்குகள் சுற்றுகின்றன. இதுதான் நீங்கள் அருள்பாலிக்கும் முறையா? என்றாள் கோபமும், அச்சமும் கொப்பளிக்க! லட்சுமி! என்னைக் குறை சொல்வதே உனக்கும், என் பக்தர்களுக்கும் வேலையாகப் போய் விட்டது. நீ தானே இசைசித்தனை இங்கே வரவழைக்கச் சொன்னாய். அதற்கான ஏற்பாட்டைத் தானே நான் செய்திருக்கிறேன், என்றார்.

Post a Comment

 
Top
Related Posts Plugin for WordPress, Blogger...