GuidePedia

0
நாரதர் பகுதி-23
ஒருவழியாக எட்டு நாட்களும் கடந்தன. நாகராஜனான பத்மன் ஊர்வந்து சேர்ந்தான். அவனிடம், நடந்ததைச் சொன்னாள் அவனது மனைவி. சற்று கூட ஓய்வெடுக்காமல், உடனே புறப்பட்டான் பிருகுவைச் சந்திக்க. அவரை வணங்கினான். பிருகு முனிவரே! தாங்கள் ஸ்ரீமன் நாராயணனையே தரிசித்த சீலர். சிவலோகத்திற்கும், பிரம்மனின் சத்தியலோகத்திற்கும் நினைத்தவுடனேயே சென்று திரும்பும் சீலர். இப்படிப்பட்ட தாங்கள், என் நாட்டுக்குள் வந்தும், வீட்டில் தங்காமல் வெளியே தங்கிவிட்டீர்கள். தாங்கள் வந்த நேரத்தில், நான் ஊரில் இல்லாமல் போனது என் துரதிர்ஷ்டமே. தாங்கள் இப்போதாவது என் குடிசைக்கு வாருங்கள். எங்களுடன் உணவருந்தி விரதத்தை முடித்துக் கொள்ளுங்கள். தொடர்ந்து எட்டு நாட்கள் அன்னபானமின்றி தாங்கள் உபவாசம் இருக்க வேண்டியதன் அவசியம் என்னவென நான் தெரிந்து கொள்ளலாமா? என்று வணக்கத்துடன் கேட்டான். பத்மா! சூரியலோகம் வரை சென்று வருவதென்பது சாதாரண காரியமா? சுட்டெரிக்கும் அந்த சூரியனின் வெப்பத்தை பூமியிலுள்ளவர்கள் தாங்கிக் கொள்வதே அரிதாக இருக்கும்போது, நீ அங்கு சென்று வந்துள்ளாய். அங்குள்ள விபரங்களை முதலில் சொல். பிறகு என் கதையைப் பார்க்கலாம் என்றார் பிருகு. மாமுனிவரே! சூரியலோகம் என்பது இந்திரலோகத்தை விட உயர்ந்ததாக இருக்கிறது. எந்நேரமும் வாத்திய முழக்கம் கேட்டவண்ணம் இருக்கிறது. அழகிய பெண்களின் நடனம் நிற்காமல் நடக்கிறது. சூரியலோகத்தில் பல அறிஞர் பெருமக்கள் உள்ளனர். அவர்கள் பலவித பொருட்களில் சுவையான, பயனுள்ள விவாதம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அங்கே செல்வத்திற்கு பஞ்சமில்லை. அங்கிருந்து வரும் ஒளி என்னதென நினைக்கிறீர்கள்? சூரியபகவான் தன் மனைவி உஷை யுடன் ஒரு சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறான். அந்த சிம்மாசனத்தில் நவரத்தின மணிகள் தொங்குகின்றன. அதிலிருந்து புறப்படும் ஒளியே நம் கண்ணைப் பறிக்கிறது. அவையே கதிர்களைப் பரப்புகிறது. 

சூரியபகவானிடம் ஒரு தேர் இருக்கிறது. அதில் ஏழுவகையான நிறங்களில் குதிரைகள் உள்ளன. அவற்றில் இருந்து புறப்படும் ஒளி வானில் ஒரு வில்போன்ற வளையத்தை உருவாக்குகிறது. அந்தக் குதிரைகள் நடக்கிறதா... ஓடுகிறதா என்றால்... உஹும்... பறக்கின்றன. ஆம்...காற்றை விட வேகமாய் பறக்கின்றன. அவன் ஓரிடத்தில் நிலைத்து நிற்கிறான். அவனை உலகிலுள்ள அத்தனை கிரகங்களும் வலம் வருகின்றன. நாம் வசிக்கும் இந்த பூமி உட்பட. அப்படியானால், அவன் எப்பேர்ப்பட்ட புகழுடையவன் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். கிரகங்கள் அவனை வலம் வருவதால், அவன் உலகத்தை வலம் வருவது போன்ற தோற்றம் ஏற்படுகிறது. அவனைப் பார்க்க வரும் அனைவரும் அறிவுஜீவிகள். என் கண்முன்னால் நடந்த சம்பவம் ஒன்றைக் கூறுகிறேன், கேளுங்கள். ஒருநாள், ஒரு பெரியவர் சூரியலோகத்திற்கு வந்தார். சூரியனின் பாதம் பணிந்த அந்த நிமிடமே சூரியனுடன் கலந்து விட்டார். நான் பகவானிடம், சூரியநாராயணா! உன்னில் கலக்க அந்தப்பெரியவர் கொடுத்து வைத்திருக்க வேண்டும். உன்னோடு ஐக்கியமாக என்ன தகுதி வேண்டும்? என்றேன். அவன் என்னிடம், நாகலோகத்தின் நாயகனே! இப்போது என்னை வந்து அடைந்த பெரியவர், பூலோகத்தில் இருந்து வந்தார். அவர் கல்வி, கேள்விகளில் சிறந்தவர். ஒழுக்கசீலர். இந்திராதி தேவர்கள் கூட ஒழுக்கம் தவறிய வரலாறை கேட்டிருப்பாய். இவனோ விருப்பங்களை களைந்தவன், வெறுப்பு களைத் துறந்தவன். எந்த நிலையிலும் மனம் தளராதவன். ஆசைகளைத் துறந்தவன். இப்படிப்பட்ட குணநலமுடையவன் யார் ஒருவன் எந்த உலகில் இருந்தாலும், என்னோடு கலந்து விடுவான். அவனுக்கு மீண்டும் பிறவி இல்லை, என்றான். இப்படி பத்மன் சொன்ன கதையை கேட்டுக் கொண்டிருந்த பிருகு, பத்மா! நிறுத்து! நிறுத்து! நான் வந்த வேலை முடிந்து விட்டது. இந்த உலகத்தில் நான் தான் தர்மப்பிரபு, விருந்தினர்களை வரவேற்பதில் உயர்ந்தவன் என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தேன். என் உறவினர்களும், நண்பர்களும் என் விருந்தோம்பலைப் பாராட்ட வேண்டும் என்ற சுயநலம் அதில் கலந்திருந்தது. 

சூரியலோகத்தில் நடந்த அந்த சம்பவத்தைக் கேட்டபிறகு, விருப்பு வெறுப்பற்ற முறையில் சேவை செய்வது ஒரு மனிதனின் கடமை என்பதைப் புரிந்து கொண்டேன். நாரதமகரிஷி தான் உன்னிடம் என்னை அனுப்பி வைத்தார். உன்னிடம் சென்றால் என் சந்தேகங்களுக்கு தக்க பதில் கிடைக்கும் என்றார். நீ எனக்காகவே சூரியலோகம் சென்று வந்தது போலுள்ளது என்றவர், பத்மனிடம் விடைபெற்று திரும்பினார். பார்த்தாயா இந்திரா! உன் ஆட்சியைப் பிடிக்க பலரும் போட்டியிடுவதாக நீ சொல்கிறாய். இந்த ஆட்சி, அதிகாரம் என்பவையெல்லாம் தற்காலிக சுகங்களே! இதில் சுகத்தை விட துக்கமும், ஆட்சி போய்விடுமோ என்ற பயமும் தான் அதிகமாக இருக்கிறது. எனவே, நீ உனக்கு வரும் துன்பங்களை ஒரு பொருட்டாகக் கருதாதே. ஆசைகளைத் துறந்துவிட்டால், ஆட்சியைப் பற்றிய கவலை வராது. இந்த ஆட்சி போனால் போகட்டும் என விட்டு விடு. பகவானை மனதில் நினை. உன் சுகத்தில் எந்தக் குறைவும் வராது என ஆசியளித்தார் நாரதர். இந்திரனும் மனம் தெளிந்தான். நாரதர் அவனிடம் விடைபெற்று, மந்தேகம் என்ற தீவின் வழியாக தன் இருப்பிடம் திரும்பிக் கொண்டிருந்தார். வானத்தில் சூரியன் உக்கிரமாக எரிந்து கொண்டிருந்தான். வழக்கத்தை விட இது என்ன கொடிய வெயில். சூரிய பகவானுக்கு கோபம் வந்து விடுமானால், அவன் இப்படித்தான் பூமியில் ஒரு பயிர்பச்சை கூட இல்லாத அளவுக்கு தன் கற்றைகளால் எரித்து விடுவான். நாரதர் அங்கிருந்தபடியே காற்றிலும் கூடிய வேகத்தில் சூரியலோகத்தை அடைந்தார். சூரியன் தன் கோபத்தை மறைத்துக் கொண்டு, வருக வருக! நாரத மகரிஷியின் வரவால் எரிந்து கொண்டிருந்த என் மனம் குளிர்ந்தது, என்றான்.

Post a Comment

 
Top
Related Posts Plugin for WordPress, Blogger...