GuidePedia

0
நாரதர் பகுதி-18
திலோத்துமை மிக அழகாக இருந்தாள். இப்படியொரு ஈடிணையற்ற அழகியைப் பார்த்ததும் எனக்கே அவள் மீது ஆசை வந்து விட்டது, என்ற பிரம்மா, மகனிடம் மேலும் பேசாமல் கூசி நின்றார். சொல்லுங்கள் தந்தையே!  முழுதும் நனைந்தவனுக்கு வெண் கொற்றக்குடை எதற்கு? அடுத்து என்ன நடந்திருக்கும் என்பதை என்னால் ஊகிக்க முடிகிறது. அவளை என்ன செய்தீர்கள்? என்றார் நாரதர். மகனின் கேள்விகள் ஒவ்வொன்றும் இடியாய் விழுந்தது பிரம்மனின் நெஞ்சில்.நம் புராணக்கதைகள் பல நல்ல கருத்துக்களைச் சொல்லியிருக்கின்றன. கட்டியவளைத் தவிர மற்ற பெண்களை தாயாகவோ, சகோதரியாகவோ பார்க்க வேண்டுமென. ஆண்வர்க்கம் அதை செய்வதில்லை. அதிலும் இப்போது பெண்கள்  ஆண்களிடம் சிக்கி படும் பாடு பற்றிய செய்திகள் நெஞ்சைப் பதற வைப்பதாக இருக்கின்றன. பெண்களில் சிலரும் உறவுமுறை பாராமல் ஆண்களுடன் தொடர்பு கொண்டுள்ளதைச் சித்தரிக்கும் செய்திகளும் வருகின்றன. இப்படியெல்லாம் வரும் என்று தெரிந்து தானோ என்னவோ, புராணங்களில் அன்றே இதுபோன்ற கதைகளை எழுதி வைத்துள்ளனர். பெற்ற மகளுக்கு சமமான திலோத்துமை மீது மையல் கொண்ட நான், அவளை ஆசையோடு அணைத்தேன். இதை சற்றும் எதிர்பாராத திலோத்துமா,  இப்போது தான் என்னைப் படைத்தீர். படைத்தவன் தந்தைக்குச் சமம். நீர் என்னிடம் தகாத முறையில் நடக்க முயற்சிக்கிறீர். என்னை விட்டு விடும் என்று கதறியழுதாள். எனக்கோ வெப்பம் தலைக்கேற, அவளை மீண்டும் அணைத்தேன். இனியும் என்னுடன் பேசி பயனில்லை என்பதை உணர்ந்த திலோத்துமா, என் பிடியில் இருந்து தப்பி ஓடினாள். எங்கு போனாலும் நான் விடவில்லை. பெண் ரூபத்தில் இருந்தால் தானே இவரால் நம் மானத்தைப் பறிக்க முடியும்? உருவத்தை மாற்றிக் கொண்டால் என்ன? என நினைத்தாளோ என்னவோ? சற்று நேரத்தில் அவள் பெண் மானாக மாறி விட்டாள். அவள் மீது தாபம் கொண்ட நான், ஆண்மானாக மாறி அவளை விரட்டிப் பிடித்தேன். முடிவில் என் பசிக்கு இரையானாள் அவள்.

இந்த விஷயம் உன் அன்னைக்குத் தெரிந்து விட்டது. திலோத்துமா அழுது புலம்பி ஊரைக் கூட்டி விட்டாள். இந்திரன் முதலான தேவர்கள் என்னைப் பழித்தனர். தேவலோகத்தினர் முன்னால் தலையை நீட்ட முடியவில்லை, என்றார். நாரதர் அவரை தேற்றி, தந்தையே! தவறு செய்வது இயல்பு தான். எனினும் இதனால் ஏற்படும் விளைவுகளை நீர் ஏற்கத்தான் வேண்டும். படைக்கும் தொழில் உம்மிடமிருந்து பறிக்கப்படும். அதற்கு முன்னதாக சிவபெருமானைச் சரணடைந்தால் நீர் தப்பலாம், என்றார். மகனின் வார்த்தையை ஏற்று, சிவனைக் காணச் சென்றார் பிரம்மா. பெண் பித்து பிடித்தவன் தேவனே ஆனாலும் இறைவன் அவன் முகம் பார்ப்பதில்லை. பல்லாயிரம் ஆண்டு கடுமையான விரதமும் தவமும் இருந்து சிவனைச் சந்தித்தார் பிரம்மா. அவருக்கு மன்னிப்பளித்து விடுவித்த கருணைக்கடலான சிவன், இனியும் இப்படி செய்யாதே. உன் மனைவி கலைவாணி என் மீது கொண்ட பக்தியால் உன்னை விடுவிக்கிறேன். தவறு செய்யும் கணவன்மாருக்காக பெண்கள் விரதமிருந்து என்னிடம் பிரார்த்திப்பதால், நான் கயவர்களையும் விட வேண்டி வருகிறது. ஏற்கனவே ஒருமுறை இப்படி செய்ததால், ஐந்து தலையுள்ள உன்னை நான் முகன் ஆக்கினேன். இனியும் தவறு செய்தால்... என ஒரு பார்வை பார்த்தார் சிவன்.பிரம்மா தலைகுனிந்து விடைபெற்றார். அதன்பின் பிரம்ம சரித்திரத்தில் தவறே நடக்கவில்லை. தந்தை சிரமத்தில் சிக்கியுள்ள நேரத்தில் அவரைக் காப்பது மகனின் கடமை. மகனின் ஆலோசனையின் பேரிலேயே சிவனிடம் மன்னிப்பு பெற்றார் பிரம்மா. தந்தைக்கு மீண்டும் படைக்கும் தொழில் கிடைத்ததை அறிந்து மகிழ்ந்த நாரதர், வானில் சஞ்சரித்துக் கொண்டிருந்தார். பூலோகத்தில் இருந்த ஒரு காடு அவரது கண்ணில் தென்பட்டது. அங்கே ஐந்து வாலிபர்கள், ஒரு வயதான பெண்மணி, ஒரு இளவயதுப் பெண் ஆகியோர் கால்போன போக்கில் போய்க் கொண்டிருந்தனர். 

நாரதர் அவர்களை உற்றுப் பார்த்த போது, ஆஹா...இவர்கள்  நாராயணனின் மைத்துனர்களான பாண்டவர்களும், அவரது அத்தை குந்ததேவியும், பாண்டவர்களின் மனைவி திரவுபதியும் அல்லவா? சூதாட்டத்தால் நாடிழந்த இவர்கள், கானக வாழ்க்கை வாழ்வதற்காக இங்கு வந்துள்ளார்கள் போலும்! எதற்கும் தர்மனை பார்த்து வருவோம். பாவம்...நல்லவன் ஒருவன் கஷ்டப்படக்கூடாது.  உலகில் மனிதனாய் பிறந்தவனை விதி விடுவதில்லை. அப்படி விதிப்பயனை அடைந்து கஷ்டப்படுபவர்களுக்கு, யாரொருவன் ஆறுதல் சொல்கிறானோ, அவனுக்கு வைகுண்ட பதவி காத்திருக்கிறது, என்றவராய் கீழே இறங்கினார். நாரதரின் மனநிலை நம்மில் பலரிடம் இல்லை. இப்போது அண்டை அயலான் கஷ்டப்படுகிறான் என்றால், சிலருக்கு ஒரே குஷி. இவனுக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும். நம்மை விட உயர்ந்த ஸ்தானத்தில் இருந்த இவன், இப்போது தாழ்ந்து விட்டான். சந்தோஷமாக இருக்கிறது, என்று மனதுக்குள்ளேயே துள்ளிக்குதிப்பவர்களும், கஷ்டப்படுபவர்களை எக்காளம் செய்பவர்களும் தான் அதிகமாகி விட்டார்கள். தர்மமகராஜா முன்பு வந்திறங்கினார் நாரதர். பாலைவனத்தில் தாகத்தால் தவித்த பயணிகள் போல், சிரமப்பட்டுக் கொண்டிருந்த அவர்களது மனதுக்கு நாரதரின் வருகை ஆறுதலாக இருந்தது. மகரிஷி! தாங்களா! இந்த நட்ட நடுக்காட்டில் தங்கள் தரிசனம் கிடைக்கப் பெற்றதன் மூலம், நாங்கள் பாக்கியம் பெற்றோம்.  எங்கள் துன்பங்கள் நீங்கி விட்டதாகவே கருதுகிறோம், என்றார் தர்மராஜன். நாரதர் தர்மரிடம், தர்மா! துன்பப்படாதவர்கள் உலகில் யார்? தேவர்களும், தெய்வங்களும் கூடத்தான் துன்பப்படுகின்றனர். ஆனால், துன்பத்தை கடவுள் தருவதில்லை. நாமாகவே இழுத்துக் கொள்கிறோம். உதாரணத்துக்கு பகடை விளையாடியது உன் குற்றம் தானே தவிர, தெய்வத்தின் குற்றமல்லவே, என்றார் நாரதர். தர்மர் தலைகுனிந்து நின்றார்.

Post a Comment

 
Top
Related Posts Plugin for WordPress, Blogger...