GuidePedia

0
நாரதர் பகுதி-20 
இது என்ன புதுப்பூதம்? என்ற திருமால், மனைவியிடம், லட்சுமி! உன் சகோதரன் தேவர்களைப் படுத்தும் பாட்டை நீ அறிவாயா? இப்படிப்பட்ட சகோதரனுக்காக எப்படி பரிந்து பேச முடிகிறது? என்றார் திருமால். அன்பரே! நல்லவனோ கெட்டவனோ! ரத்த சொந்தம் என வந்து விட்டால், அவர்கள் தவறு செய்தாலும் கண்ணுக்குத் தெரிவதில்லை. சரி...உங்கள் மைத்துனனுக்கு அறிவுச்சூடு கொடுத்து அவனை திருத்த வேண்டுமானால் அனுமதிக்கிறேன். எக்காரணம் கொண்டும் அவனை நீங்கள் கொல்லக்கூடாது. சத்தியம் செய்யுங்கள் என்றாள். வேறு வழியின்றி சத்தியம் செய்து விட்டு விஷ்ணு புறப்பட்டார். இந்திரனுக்கு இந்த சத்தியம் பற்றிய விபரம் தெரியவந்தது. அவன் இன்னும் கலங்கினான். ஒருவன் தவறே செய்யக்கூடாது. செய்தால், அதன் பலனில் இருந்து தப்பிப்பது அவ்வளவு சுலபமல்ல. இந்த வாக்கியத்துக்கு முழுப்பொருத்தமாக இப்போது இந்திரன் இருந்தான். இதனிடையே ஜலந்தராசுரன் தன்னை உருவாக்கிய சிவபெருமானை சந்திக்கச் சென்றான். அவனைப் படைத்தவர் என்ற முறையில் சிவன் அவனுக்கு தந்தை முறை வேண்டும். பார்வதிதேவியார் தாய் முறை வேண்டும். இவன் கைலாயம் செல்லும் வழியில், அழகே உருவாக ஒரு பெண் அமர்ந்திருந்தாள். தோழிப்பெண்கள் அவளுடன் விளையாடிக் கொண்டிருந்தனர். கழுத்தில் ஏராளமான ஆபரணங்களுடன் திருமாங்கல்யமும் பளிச்சென காட்சியளித்தது. திருமணமானவள் என்று தெரிந்தும், அவளது அழகை அவன் ரசித்தான். அவள் யாரென்று அங்கு நின்ற பூதகணங்களிடம் விசாரித்தான். பரமசிவன் மனைவி பார்வதி என்று அவர்கள் சொன்னார்கள். ஆனாலும், தாய் ஸ்தானத்து பெண்மணியை அவன் காமப்பார்வை பார்த்தான். அவளைத் தன் இடத்திற்கு கடத்திச் செல்ல திட்டமிட்டான். ஒரு மறைவிடத்திற்கு சென்று சிவனைப் போல் தன் உருவை மாற்றிக் கொண்டான். இதையறியாத நந்திதேவரும், பார்வதியும் அவனை சிவன் என நினைத்து வழிபட்டனர்.

இங்கே இப்படியிருக்க, விஷ்ணு ஜலந்தராசுரனின் அரண்மனைக்குச் சென்றார். அவர் மாயன் அல்லவா? தன் உருவத்தை ஜலந்தராசுரன் போலவே மாற்றிக் கொண்டார். ஜலந்தரனின் மனைவியின் கற்புக்கு களங்கம் எப்போது உண்டாகிறதோ, அப்போதே அவனுக்கு அழிவு ஆரம்பமாகி விட்டது என்பதை அவர் அறிவார். இதோ! கணவன் செய்த பாவம் மனைவியின் தலையில் விழப்போகிறது. நீங்கள் செய்த பாவம், திரவுபதியின் மீது விழுந்தது போல! என்ற நாரதர், அவர்களை உற்று நோக்கினார். பாண்டவர்களும் குந்திதேவியும் கண்ணீர் வழிய ஜலந்தராசுரனின் மனைவி பிருந்தாவுக்கு மாயக்கண்ணனால் ஏற்படப் போகும் அபத்தம் பற்றி கேட்க ஆவலாயினர். பாண்டவச் செல்வங்களே! தன் கணவனின் ரூபத்தில் வந்த பகவானை பிருந்தை தன் கணவன் என நினைத்து வரவேற்றாள். அவரை ஆசனத்தில் அமர வைத்து பாதத்தை கழுவினாள். கணவனுக்குரிய பாதபூஜையை பகவானுக்குச் செய்தாள். யார் ஒருத்தி, கணவனைத் தவிர பிறன் ஒருவனை கணவனாக மனதில் கடுகளவு எண்ணி விடுகிறாளோ, அப்போதே அவள் கற்பிழந்து போகிறாள். பிருந்தையும் இம்மட்டில் தன்னை அறியாமலே கற்பிழந்தாள். திருமால் அவள் முன் பாம்பணையில் சயனித்த நிலையில் காட்சி தந்தார். பிருந்தா! நீ என் பக்தை. உன் பக்திக்கு வசப்பட்டு இங்கு வந்தேன். ஆனால், உன் கணவனின் வடிவத்தில் வந்த எனக்கு நீ பாதபூஜை செய்ததால் கற்புக்கு பங்கம் ஏற்பட்டது. இதனால், உன் கணவன் அழிவான். காரணம், அவன் எந்த ஈசனால் படைக்கப்பட்டானோ, அவரது மனைவியையே கடத்த நினைத்து அங்கே சிவவேடத்தில் காத்திருக்கிறான். சிவபெருமானுக்கு இது தெரிந்து விட்டது. இப்போது அங்கே சிவனுக்கும், அவனுக்கும் போர் நடந்து கொண்டிருக்கிறது என்றார். பிருந்தா இதை ஏற்க மறுத்தாள். நாராயணமூர்த்தியே! இது கொஞ்சம் கூட முறையல்ல. என் கணவர் செய்த தவறுக்காக என் கற்புக்கு சோதனை வைத்தது எவ்வகையிலும் முறையாகாது. 

தெய்வமான நீயே இப்படி நடக்கலாமா? கற்பிழந்த நான் இனி உயிர் வாழ மாட்டேன். அவர் வருவதற்குள் என்னை அழித்துக் கொண்டு விடுவேன். அவர் இங்கு வந்து என்னைக் காணாமல் திண்டாடுவார். என் பதி என்னைப் பிரிந்து தவிப்பது போல, நீரும் உம் மனைவி லட்சுமியைப் பிரிந்து தவிப்பீர். இது என் சாபம் என்றாள் கோபமும் கண்ணீரும் பொங்க. சொன்னது போலவே அக்னி வளர்த்து அதில் குதித்து இறந்தாள். பரந்தாமனே அந்த கற்புக்கரசியின் நிலைக்காக கண்ணீர் வடித்தார். அப்போது ஜலாந்தராசுரனிடம் இருந்து தப்பித்து வந்த பார்வதி புனிதநீரை பிருந்தாவின் சாம்பலில் தெளித்தாள். அது ஒரு செடியாக மாறியது. அதற்கு துளசி என பெயர் சூட்டினாள். துளசி என்றால் ஈடு இணையற்றது என்று பொருள். திருமால் அவளிடம், பார்வதி, களங்கமற்ற இந்த செடியின் இலைகளைக் கொண்டு யார் என்னை பூஜிக்கிறார்களோ, அவர்களுக்கு கேட்டதைக் கொடுப்பேன் என்றார். இதற்குள் ஜலந்தராசுரனுடன் போரிட்டு நெற்றிக்கண் திறந்து அவனைக் கொன்றார் சிவபெருமான். எங்கிருந்து வந்தானோ அங்கேயே அடைக்கலமானான் ஜலாந்தரன். தர்மா! கேட்டாயா! முப்பெரும் தெய்வங்களும் பட்டபாட்டை. பிருந்தாவின் சாபம் பிற்காலத்தில் நாராயணனை லட்சுமியிடம் இருந்தும் பிரித்தது. அதனால் அவர் சிரமப்பட்டது தனிக்கதை. எனவே துன்பம் என்பது எல்லோருக்கும் பொதுவானது. அதைத்தான் விதிப்படி நீங்களும் அனுபவிக்கிறீர்கள். விரைவில் இந்த துன்பம் தீர்க்க அந்த பரந்தாமன் உங்களுக்கு உதவுவான். உங்களுக்கு என் ஆசிர்வாதம், என்று முடித்தார் நாரதர். இக்கதை கேட்டு ஆறுதலடைந்த பாண்டவர்களிடம் விடை பெற்று, வான்வெளியில் சஞ்சரித்த போது, அஷ்டவசுக்கள் எனப்படும் திசைக்காவலர்கள் எட்டு பேர் கையைப் பிசைந்து கொண்டு நின்றதைக் கவனித்தார்.

Post a Comment

 
Top
Related Posts Plugin for WordPress, Blogger...