GuidePedia

0
நாரதர் பகுதி-22
அணிலா! அவ்விமோசனம் பற்றி முதலில் சொல். என்னால் முடியுமானால் தீர்த்து வைக்கிறேன், என்றார் நாரதர். முற்றும் அறிந்த முனிவரே! தாங்கள் எல்லாம் தெரிந்திருந்தும் அறியாதவர் போல் பேசுகிறீர்கள். ஐயனே! நூறாண்டுகள் நாங்கள் அனுபவித்த துன்பம் போதும். இனியும் கலகம் செய்து, எங்களை நிரந்தரமாக பிணம் தின்ன வைத்து விடாதீர்கள், என அவரது பாதத்தில் விழுந்தான் அணிலன். அவனைத் தொடர்ந்து மற்ற வசுக்களும், மாலினியும் காலில் விழுந்தனர். அவர்களை எழுப்பிய நாரதர் சிரித்தபடியே, அன்புக்குரிய குழந்தைகளே! என்னால் தான் உங்களுக்கு சாப விமோசனம் என்பதை நான் அறிவேன். இன்றோடு நூறு ஆண்டுகள் நீங்கள் கொடிய தண்டனையை அனுபவித்து விட்டீர்கள். பசுவதை எவ்வளவு கொடியது என்பதை உணர்த்தவே இந்த நாடகம் இறைவனின் சங்கல்பத்தால் இப்படி நடந்தது. அதில், நீங்கள் பாத்திரமாக நடித்தீர்கள். இனி உங்கள் சாபம் தீர்ந்தது. காமதேனு ஏற்கனவே இதுபற்றி என்னிடம் தெரிவித்து விட்டது, என்று சொல்லி, தன் கமண்டலத்தில் இருந்த தீர்த்தத்தை அவர்கள் மீது தெளித்தார். அவர்கள் தங்கள் பழைய உருவை அடைந்ததுடன், நடந்ததை எல்லாம் மறந்தே விட்டனர். புதுமனிதர்களாக உருவெடுத்த அவர்கள் நாரதரை புதிதாகப் பார்ப்பவர்கள் போல் வணங்கி, தங்கள் உலகங்களுக்கு திரும்பினர். நாரதர் மிக்க மகிழ்ச்சியுடன் தன் சஞ்சாரத்தை துவக்கினார். இந்திரலோகத்திற்கு சென்று பல நாட்கள் ஆகிவிட்டதால், அடுத்த கணமே அவர் இந்திரலோகத்தில் இருந்தார். நாரதர் வந்துள்ள தகவல் அறிந்து, இந்திரன் ஓடோடி வந்தான். வரவேண்டும் மகரிஷி, என வரவேற்றான். ஆனால், அவனது முகத்தில் ஏதோ வாட்டம் இருந்தது. இந்திரா! உன் வரவேற்பு என்னவோ பலமாகத்தான் இருக்கிறது. ஆனால், உன் முகத்தில் ஏதோ ஒரு களைப்பும், இழப்பும் தெரிகிறதே! ஏதாவது சிக்கலில் மாட்டிக் கொண்டாயா? என்று வருத்தமாக கேட்பது போல் நடித்தார் நாரதர்.

அப்படியொன்றுமில்லை மகரிஷி! நான் தேசத்தை ஆள அசுரர்கள் போட்டி போடுகிறார்கள். நல்லவர்கள் கூட யாகம் செய்து, சிவனருளால் என் இடத்திற்கு வர வேண்டும் என துடிக்கிறார்கள். நான் எப்படி என் இடத்தை விட்டுக் கொடுக்க முடியும். இந்திரலோகத்தின் நிரந்தரத் தலைவன் நான் தானே! பார்த்தீர்களா நியாயத்தை! என்ற இந்திரனிடம், இந்திரா! உன்னிடம் இருக்கும் செல்வம் நிலையற்றது. இதை விட்டு விட்டு போக வேண்டியது தானே. எனக்கு சமீபத்தில் நடந்த ஒரு சூரியலோக கிசுகிசு தெரியும். காதைக் கொடு. அதைக் கேட்டால் நீயும் திருந்தி விடுவாய், என்றார். சூரியலோகத்தில் நடந்த அந்தக் கதையைக் கேட்க இந்திரன் ஆவலானான். இந்திரா! பிருகுமுனிவரைப் பற்றி நீ அறிவாய். பகவான் நாராயணனே மிகவும் பொறுமையான கடவுள் என நிரூபித்தவர் அவர். ஒருமுறை அவருக்கு ஒரு தீர்க்க முடியாத சந்தேகம் ஏற்பட்டது. அவர் பத்மம் என்ற ஊரில் மனைவி, குழந்தைகளுடன் சவுக்கியமாக வசிக்கிறார். அவர் வீட்டுக்கு விருந்தினர்கள் யாராவது போனால் போதும். விருந்தும் மருந்தும் மூன்றுநாள் என்ற பழமொழி அவருக்கு மட்டும் சொந்தம் கிடையாது. மூன்று நாளென்ன...மூன்று யுகங்கள் அவர் வீட்டில் ஒரு விருந்தினர் தங்கினால் கூட முகம் சுளியாமல் உபசரிப்பார். அந்த விருந்தினர் ஊர் திரும்பும்போது, தேவையான பொருளும் கொடுத்தனுப்புவார். இப்படியெல்லாம் நன்மை செய்தாலும் கூட அவர் மனதில் ஏனோ திருப்தியில்லை. நம் பணிகளில் ஏதேனும் குறை வைக்கிறோமோ? மனைவி, மக்கள் நம்மிடம் குறை ஏதேனும் காண்கிறார்களோ? நம்மால் உபசரிக்கப்படுபவர்கள் மனத்திருப்தியுடன் செல்கிறார்களா? இல்லையா? எல்லாரும் நம்மால் பயனடைகிறார்களா இல்லையா? அதற்கேற்ற பொருட்செல்வம் போதுமா போதாதா? இப்படி பல சந்தேகங்கள்.
இதற்கு விடையை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த சமயத்தில் நான் அவரை சந்தித்தேன்.

 அவர் என்னிடம் மேற்படி கேள்விகளையெல்லாம் கேட்டார். நான் அவரிடம், இந்த கேள்விகளுக்குரிய விடையை என்னை விட நாகலோக தலைவனான பதுமன் அழகாகச் சொல்வான். அவனைப் போய் பாருங்கள் என சொல்லி அனுப்பினேன். பிருகு முனிவர் நாகலோகத்திற்கு உடனே கிளம்பி விட்டார். அங்கே பதுமனின் மனைவி மட்டுமே இருந்தாள். முனிவருக்கு பலமான உபசாரம் செய்தாள். தான் வந்த விஷயத்தைச் சொன்னார் பிருகு. அவர் சூரியலோகம் போயிருக்கிறார். வருவதற்கு எட்டு நாள் ஆகும். நீங்கள் அதுவரை இந்த ஏழையின் குடிசையில் தங்க வேண்டும் என கேட்டுக் கொண்டாள் பத்மனின் மனைவி. இல்லை தாயே! நான் வெளியே தங்கிக் கொள்கிறேன், என சொல்லிவிட்டு வெளியே போய்விட்டார். வெளியே சென்ற பிருகு, பதுமன் வந்து விடை சொல்லும் வரை நோன்பிருக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதன்படி அவர் பட்டினியாகவே இருந்தார். இதைக் கேள்விப்பட்ட பதுமனின் பத்தினி, முனிவரைச் சந்தித்து, சுவாமி! எங்கள் வீட்டுக்கு வந்த நீங்கள் பட்டினியா இருப்பதை நான் தாங்கமாட்டேன். என் கணவர் வந்தால், என்னைக் கடுமையாகக் கடிந்து கொள்வார். நீங்கள் தயவு செய்து உணவுண்ண வேண்டும். இல்லாவிட்டால், நானே இங்கு உணவைக் கொண்டு வருகிறேன் என்றாள். முனிவர் ஒப்புக்கொள்ளவில்லை. அம்மா! இந்த உலகத்திலேயே விருந்தினர்களை உபசரிப்பதில் நான் தான் பெரியவன் என நினைத்துக் கொண்டிருந்தேன்ண. ஆனால், உன் அன்பான உபசரிப்பின் முன்னால் அவை அனைத்தும் தவிடு பொடியாகி விட்டன. இருந்தாலும், உன் கணவன் வரும்வரை உண்ணாநோன்பு இருப்பதென சங்கல்பம் செய்து விட்டேன். முனிவர்கள் ஒரு உறுதி எடுத்தபிறகு அதில் இருந்து பிறழக்கூடாது என்பது விதி. எனவே, என்னை வற்புறுத்தாதே தாயே என்றார். அந்த நாககன்னிகை என்ன செய்வதென தெரியாமல் திகைத்தாள்.

Post a Comment

 
Top
Related Posts Plugin for WordPress, Blogger...