GuidePedia
Latest News

0
நாரதர் பகுதி-24
வாழ்க! வாழ்க சூரியதேவா! என சூரிய பகவானை வாழ்த்திய நாரத மாமுனிவர், சூரியனே! உன் வரவேற்பு எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. நான் இங்கு வந்திருக்கிறேன் என்பதால் சற்று குளிர்ந்திருக்கிறாய். ஆனால், நான் மந்தேகத்தீவைக் கடந்த போது, உலக உயிர்களெல்லாம் வருந்தும் வகையில் அக்னியைப் பொழிந்து கொண்டிருந்தாயே! ஏன்? இப்போது ஒன்றும் அக்னி நட்சத்திர காலமும் இல்லையே! ஏதோ கோபத்தில் இருப்பதாக தெரிகிறது. என்னிடம் சொல். பிரச்னை தீர வழியிருக்கிறதா? என பார்க்கிறேன், என்றார். இந்த கலகப்பேர்வழியிடம் ஏதாவது ஒன்றைச்சொல்ல, இவர் நிலைமையை இன்னும் சிக்கலாக்கி விட்டால் என்ன செய்வது? என எண்ணிய சூரியன் சற்று தயக்கம் காட்டியதைக் குறிப்பால் உணர்ந்த நாரதர், சூரியா! இந்த கலகக்காரனிடம் நம் பிரச்னையை சொல்லவேண்டுமா என யோசிப்பதை உன் முகக்குறிப்பாலேயே புரிந்து கொண்டேன். சரி! எனக்கெதற்கு வம்பு! நீ எப்படி குமுறினால் என்ன என்று, நான் வந்த வழியே ஒழுங்காகப் போயிருக்க வேண்டும். ஐயோ பாவம்! இந்த சூரியனுக்கு ஏதாவது நன்மை செய்வோம் என வந்தேன் பார்! எனக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்! என சலித்துக் கொண்டு, சரி! சூரியா! நீயே மனநிலை சரியில்லாமல் இருக்கிறாய். நான் கிளம்புகிறேன், நாராயணா! என்றவராய், கிளம்புவது போல் பாவனை காட்டினார். சூரியன் தடாலென அவர் காலில் விழுந்துவிட்டான். மகரிஷி! என்னை மன்னிக்க வேண்டும். தங்களிடம் சொல்லக்கூடாது என்பதல்ல! மன உளைச்சலில் இருந்ததால், ஏதோ நினைவில் இருந்தேன், என சமாளித்து விட்டு தன் நிலையைச் சொன்னான். மகரிஷி! அப்சரஸ் போன்ற மனைவி, வாழ்க்கையை நிர்ணயிக்கும் சக்திகளான எமதர்மன், சனீஸ்வரன் ஆகிய மகன்கள், ஏழு குதிரை பூட்டிய தேரில் ஏறி உலகையே சுற்றி வருகிறேன். 

இத்தனை இருந்தும் என்ன பயன்? என்னை, மந்தேகத்தீவில் வாழும் அசுரர்கள் பயமுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். பலமுறை அவர்களை அடக்க போரிட்டேன். தோல்வியையே தழுவுகிறேன். அவர்களுக்கு அடிமை ஆகி விடுவேனோ என அஞ்சுகிறேன், என்றான். நாரதர் சிரித்தார். ஆதித்யா! உலகில் நிம்மதியாய் இருப்பவர்கள் ஆசையற்றவர்கள் தான் என்ற உண்மையை உன் மூலமாக பிருகு முனிவர் கற்றிருக்கிறார். இங்கு வந்த நாகராஜன் பத்மனும் அதையே இங்கிருந்து கற்று வந்தான். அப்படிப்பட்ட உனக்கேன் பதவிப்பற்று? இந்த அசுரர்களை அழிக்க ஒரு வழி சொல்கிறேன். இவர்களின் உயிர் போக ஒரே ஒரு வழி தான் இருக்கிறது. லகில் உன்னால் தான் மழை பொழிகிறது. அந்த மழையில் எழும் ஓசை தான் இவர்களை அழிக்க முடியும்,என்றார். சூரியன் விழித்தான். மகரிஷி! மழையோடு எழும் ஒலி என்றால் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லையே! அதை உருவாக்கும் ஆற்றல் யாரிடம் உள்ளது? என்றான். அது கடினமான விஷயம். உருவமில்லாத சிவலிங்கத்தால் தான் அதை உருவாக்க முடியும். அந்த லிங்கம் எங்கிருக்கிறது என எனக்குத் தெரியும். ஆனால், நான் சொல்லி நீ அவ்விடத்தை அடைந்து பூஜை செய்வதால் பயன் ஏற்படாது. நீயே அவ்விடத்தை தேடிப் பிடிக்க வேண்டும். நீ தான் ஒளிக்கற்றைகளுடன் உலா வருபவன் ஆயிற்றே! சர்வ ஞானம் பெற்ற உனக்கு அவர் விரைவில் காட்சியளிப்பார். மற்றவர் கண்களுக்கு தெரியாமல், உன் கண்களுக்கு மட்டும் எங்கு லிங்கம் தெரிகிறதோ, அவ்விடத்தில் சிவபூஜை செய். அவர் உனக்கு அருள்பாலிப்பார், என்று சொல்லிவிட்டு விடை பெற்றார். சூரியன் இன்னும் உக்கிரமானான். ஒளிக்கற்றைகளை எங்கெல்லாமோ பாய்ச்சி சிவலிங்கத்தை தேடியலைந்தான். அசுரர்கள் வசித்த மந்தேகத்தீவில் கடலே வற்றிப்போய் விடும் அளவுக்கு சூரியனின் கதிர்கள் விழுந்தன. அசுரர்கள் ஆத்திரமடைந்தனர். அவர்கள் சூரியனை எச்சரிக்க புறப்பட்டனர். சூரியலோகத்தில் அவன் இல்லை. அவனைத் தேடி அவர்களும் புறப்பட்டனர். அப்போதெல்லாம் சூரியன் தன்னை மறைத்துக் கொண்டான்.

அவன் காவிரிக்கரை பக்கமாக தன் பார்வையைச் செலுத்தினான். ஓரிடத்தில் தெய்வீக ஒளி வீசியது. சிவபெருமான் லிங்க வடிவில் மணல் பரப்பில் தெரிந்தார். சூரியன் சந்தோஷப்பட்டான். உடனடியாக தன் ஒளிக்கற்றைகளால் லிங்கத்துக்கு அபிஷேகம் செய்தான். இப்போது சிவபெருமான் அவன் முன்னால் வந்தார். சூரியனே! உன் அபிஷேகத்தால் நான் மகிழ்ந்தேன். உன்னைப் பிடித்த துன்பம் இன்றுடன் விலகும். உலகத்திலுள்ள தண்ணீரை ஆவியாக்கி மேலே கொண்டு சென்று, பல மடங்காக நீ திருப்பித் தருகிறாய். அவ்வாறு மழை பெய்யும் போது, இனி ஒளியும், அதைத் தொடர்ந்து ஒலியும் எழும். வருணபகவான் இவ்விஷயத்தில் உனக்கு உதவுவான். அந்த ஒலியை உலகத்தார் இடி என்பர். அந்த இடி உலகிலுள்ள கொடியவர்களை அழிக்கும். யார் ஒருவர் இப்பிறவியிலும், முற்பிறவியிலும் கொடிய பாவம் செய்தனரோ, அவர்கள் இடி தாக்கி அழிவார்கள், என்றார்.இதன்பிறகு சூரியன் பெருமழையைப் பெய்வித்தான். அப்போது பயங்கர ஒலி ஏற்பட்டது. மந்தேகத்தீவில் தொடர்ந்து இடி இறங்கியது. மரங்கள் கருகின. அசுரர்களின் மாளிகை கொழுந்து விட்டு எரிந்தது. வெளியே வந்த அசுரர்களின் தலையில் விழுந்த இடி அவர்களை மண்ணோடு மண்ணாக்கியது. சூரியபகவான் அகம் மகிழ்ந்தான். மந்தேகத்தீவில் ஒரு அசுரன் கூட உயிர் பிழைக்கவில்லை. நாரதர் காட்டிய நல்வழிக்காக அவரை நன்றியுடன் நினைவு கூர்ந்தான் சூரியன். அந்த நன்றிக்குரிய நாரதர் இப்போது மன்னனாய் இருந்து திருமாலிடம் செல்வங்களை இழந்து பிச்சைக்காரன் போல் வாழ்ந்து கொண்டிருந்த மகாபலியின் முன்னால் நின்றார்.

Post a Comment

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top
Related Posts Plugin for WordPress, Blogger...