GuidePedia

0
நாரதர் பகுதி-26
நாரதமுனிவரே! அசுரமன்னனான மகாபலி, எனக்கும் மேலாக புகழ்பெற்று விளங்கினான். நாராயணனின் திருக்காட்சியைப் பெற்றான். அவரால் ஆட்கொள்ளப்பட்டான். ஒரு அசுரனுக்கு கிடைத்த இந்த பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்தில் அவனை கேலி செய்யச் சென்றேன். அவனது நல்ல மனதை நான் புரிந்து கொள்ளாமல், அவமானப்பட்டு திரும்புகிறேன். நான் ஏற்கனவே விமர்சனங்களுக்கு ஆளானவன். இன்னும், எனக்கு என்ன கதி வரப்போகிறதோ?என்றான் இந்திரன்.அவனை நாரதர் தேற்றினார். இந்திரா! பிறக்கும் குலம் முக்கியமல்ல. எக்குலத்தில் பிறந்தாலும், ஒருவன் எப்படி நடந்து கொள்கிறான் என்பதே முக்கியம். அசுரனான மகாபலி, நன்மையை மட்டும் நினைத்தான். நாராயணனுக்காக தன்னையே கொடுத்தான். குலத்தால் தாழ்ந்திருந்தாலும், நல்லவர்களை அணைப்பதே தேவர்களின் கடமை. இதற்காக வருந்தாதே. ஆனாலும், அவனது வயிற்றெரிச்சல் உன்னை சும்மாவிடாது. என்ன செய்யப் போகிறாயோ? என்று இந்திரனின் வயிற்றைக் கலக்கினார் நாரதர். இந்திரன் நிஜமாகவே கலங்கிப் போனான். நாரதரே! நீங்கள்தான் இந்த சிக்கலில் இருந்து என்னைக் காப்பாற்ற வேண்டும். ஏதாவது ஒரு வழி சொல்லுங்களேன், என்றான். நாரதர் அவனிடம், இந்திரனே! இப்போது உன்னிடம் திருமகள் குடிகொண்டிருக்கிறாள். மகாபலியை இகழ்ந்து பேசியதன் மூலம் அவள் உன்னை விட்டு அகன்றுவிடுவாள். பிறரை குறைசொல்பவர்களிடம் திருமகள் தங்குவதில்லை. குறிப்பாக ஏழைகளை யார் ஒருவர் பழிக்கிறாரோ அவரிடம் திருமகள் அறவே தங்கமாட்டாள். இதிலிருந்து நீ விடுதலை பெற வேண்டுமானால் சில காலம் மண்ணுலகில் வாழ்ந்துதான் ஆகவேண்டும். அங்கிருந்தபடியே நீ சிவபூஜை செய். கங்கையில் சென்று நீராடு. உன் பாவம் தீரும் என்றார். இந்திரனும் அவ்வாறே செய்து திருமகளை தன்னிடம் தக்கவைத்துக் கொண்டான். ஒரு வழியாக மகாபலியின் சாபத்திலிருந்து நாரதரின் உதவியால் தப்பிப் பிழைத்தான்.

இந்திரனைக் காப்பாற்றிய மகிழ்ச்சியுடன் நாரதர் பிரம்மலோகம் சென்றார். அவர் மனதில் நீண்ட நாளாக ஒரு சந்தேகம் இருந்தது. அந்த சந்தேகத்தை தன் தந்தையிடம் கேட்டு தெரிந்துகொள்ள விரும்பினார். தந்தையே! சிவபெருமானுக்கு ரிஷப வாகனம் எப்படி அமைந்தது? அவர் ஏன் உடலெங்கும் சாம்பலைப் பூசுகிறார்? அவருடைய உருவத்தின் தத்துவம்தான் என்ன? என்று கேட்டார். பிரம்மாவுக்கு பதில் தெரியும் என்றாலும்கூட, ஏற்கனவே ஒருமுறை முருகனிடம் சிக்கிக்கொண்டது நினைவு வந்தது. ஓம் என்ற பிரணவத்திற்கு பொருள் தெரியாததால் சிறைப்பட்ட தன் பழைய கதையை நினைத்துப் பார்த்தார். மகனே என்றாலும்கூட கலகக்காரன் என்பதால் நாரதருக்கு விடைசொல்ல தயங்கினார். நாரதா! நீ என் பிள்ளையாய் இருந்தாலும் கலகக்காரன் என்பதை ஊரே அறியும். இதுபோன்ற சந்தேகங்களுக்கு நான் ஏதாவது விடை சொல்ல, அதை நீ சிவலோகத்தில் போய் சொல்ல, பிரச்னைகள் ஏற்படும். எனவே நீ திருத்தணிக்கு போ. அங்கே முருகப் பெருமானிடம் உன் சந்தேகத்தைக் கேள். அவர் உனக்கு பதில் சொல்வார், என சொல்லி லாவகமாக தப்பிவிட்டார். தன் தந்தையின் முன்னெச்சரிக்கையைக் கண்டு மனதிற்குள் சிரித்துக்கொண்ட நாரதர், உங்களையா நான் மாட்டிவிடுவேன்? இருப்பினும், தாங்கள் பதில் சொல்ல மறுத்துவிட்டதால் நான் முருகனிடமே போய் தெரிந்துகொள்கிறேன், என சொல்லிவிட்டு, முருகப்பெருமான் குடியிருக்கும் ஆனந்த லோகமான திருத்தணிகை மலைக்கு வந்து சேர்ந்தார். அங்கே வள்ளி தெய்வானை யுடன் முருகப் பெருமான் களித்திருந்தார். நாரதரின் வருகையை அறிந்ததும் அவரை வரவேற்றார். அவர் முருகனை வணங்கி, குமரப் பெருமானே! ஒரு சந்தேகத்தைத் தீர்த்துப் போவதற்காக வந்தேன். இதுகூட தெரியவில்லையே என, என் தந்தையைப் பால் என்னையும் சிறையில் அடைத்துவிடாதீர்கள். இதற்கு ஒப்புக்கொண்டால்தான் கேள்வியே கேட்பேன், என சொல்லிவிட்டு அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டார். முருகன் சிரித்தபடியே, நாரதரே! தங்களைப் போன்ற தபஸ்விகளுக்கு இது தெரியாத விஷயமல்ல.

ஒரு பழத்தை வைத்துக் கொண்டு, நீங்கள் என்னையே உலகம் சுற்ற வைத்தவர். மாபெரும் அறிவாளி. அன்னையும், பிதாவுமே முதல் தெய்வம் என்பதை எனக்கு உணர்த்தியவர். அப்படிப்பட்ட தங்களுக்கு இது தெரியாத விஷயமல்ல. இருப்பினும், தெரியாத ஒன்றை பிறர் பணிவுடன் கேட்டால் அவர்களுக்கு கற்றுக் கொடுப்பதை ஞானதானம் என்பர். தங்கள் தந்தை பிரம்மன் எல்லாம் தெரிந்தவர் போல் என்னிடம் பேசினார். அதன் காரணமாகவே அவரை சிறையில் அடைத்தேன். தாங்களோ மிகுந்த பணிவோடு இக்கேள்வியை என்னிடம் கேட்டீர்கள். பதிலைக் கேளுங்கள், என்றவர் தொடர்ந்தார். ரிஷபமாகிய காளை தர்மத்தின் சின்னமாக விளங்குகிறது. ஒரு காலத்தில் இந்த ரிஷபம் சிவபெருமானை நோக்கி தவம் செய்தது. ரிஷபத்தின் நான்கு கால்களும் மனம், புத்தி, எண்ணம், அகங்காரம் என்ற நான்கு வடிவங்களைக் குறிக்கிறது. மற்ற மூன்றாலும், அகங்காரம் என்ற காலை அடக்கி தவம் செய்தது. மேலும், ரிஷபம் கடுமையான உழைப்பின் சின்னம். எவ்வளவு உழைத்தாலும் அகங்காரம் கொள்ளாதவன் யாரோ, எவ்வளவு சிறப்புடையவனாய் இருந்தாலும் ஆணவம் இல்லாதவன் யாரோ அவர் சிவனுக்கு பிரியமானவர். இதனால், சிவபெருமான் அந்தக்காளையை தனது வாகனமாகவே கொண்டார், என்றார். முருகா! நான் இதுவரை யாரிடமும் எதுவும் கேட்டதில்லை. ஆனால், ஞானகுருவான உன்னிடம் ஒன்று கேட்கிறேன். செய்வாயா? என்றார் நாரதர். எல்லாம் வல்ல முருகன் அவர் கேட்கப்போவதை அறிந்தார். நாரதரே! பூலோகத்தில் எதிர்கால தலைமுறையினர் தங்களைப் பற்றி தெளிவாக அறிந்து கொள்ளும் வகையில், திருத்தணியான இங்கு, ஒரு லிங்கத்தை ஸ்தாபித்து வணங்கிச் செல்லுங்கள், உங்கள் பெயரால் அந்த லிங்கம் நாரதேஸ்வரர் என அழைக்கப்படும். இத் திருக் கோயிலில் உள்ள தீர்த்தம் தங்கள் பெயரால் நாரதர் தீர்த்தம் என வழங்கப்படும், என்றார். நிறைந்த அருள்பெற்ற மகிழ்ச்சியில் நாரதர் வைகுண்டம் சென்றார். நாராயணப் பெருமாளின் திருப் பாதத்தில் நிரந்தரமாகத் தங்கிவிட்டார்.


முற்றும்.

Post a Comment

 
Top
Related Posts Plugin for WordPress, Blogger...