GuidePedia

0
சர்க்கரை விநாயகர்! அகோர விநாயகர்! ஹேரம்ப விநாயகர்!

சர்க்கரை விநாயகர்!


ஆழித் தேரோடும் திருவாரூரின் கீழவீதியில் ராஜ அலங்காரத்துடன் காட்சி தரும் இந்தப் பிள்ளையாருக்கு மிகப் பொருத்தமான பெயர்தான். இவரை வேண்டிக் கொண்டால், சகல கஷ்டங்கள் நீங்கி வாழ்க்கை சர்க்கரையாய் இனிக்கும் என்கிறார்கள் பக்தர்கள். மனுநீதிச் சோழன் இந்தப் பிள்ளையாரை வழிபட்ட பிறகே, தனது நகர்வலத்தைத் துவங்குவாராம். பிற்காலச் சோழர்களில் ராஜ ராஜ பெருவுடையாரும் இவரை வழிபட்டதாக கல்வெட்டுத் தகவல்கள் சொல்கின்றன. இப்படி ராஜாக்கள் வழிபட்ட- மிகப் பழைமையான இந்த பிள்ளையாருக்கு, ராஜ அலங்காரமும் பொருத்தம்தான். மாணவர்கள் கல்வியில் சிறக்க ஏலக்காய் மாலை சார்த்தியும், திருமணத் தடை அகல 108 தேங்காய் உடைத்தும், நெய் தீபம் ஏற்றியும், குழந்தை பாக்கியத்துக்கு தொட்டில் கட்டியும் இந்த ஆனைமுகத்தானை வழிபடுகிறார்கள் பக்தர்கள்!

- த.க.தமிழ்மதன்

அகோர விநாயகர்

திருநெல்வேலியில் ஸ்ரீநெல்லையப்பர் கோயிலுக்கு வடமேற்கில் கோயில் கொண்டிருக்கிறாள் பிட்டாபுரத்தம்மன். இவளின் திருக்கோயிலில் சந்நிதி கொண்டிருக்கிறார் இந்த அகோர விநாயகர். நான்கு கரங்களும் துதிக்கையும் இல்லாமல் காட்சி தருவதால், இப்படியொரு திருப்பெயர் வந்தது என்கிறார்கள். அந்நிய படையெடுப்பின்போது பின்னப்படுத்தப்பட்டதாம் இந்த விநாயகர் விக்கிரகம். பின்னம் அடைந்த விக்கிரகத்தை வழிபாட்டில் வைத்திருக்கக் கூடாது என்பதால், இவரை வழிபட்டு வந்த குடும்பத்தினர் விக்கிரகத்தை திருக்குளத்தில் சேர்ப்பித்தார்களாம். ஆனால் அவர்கள் கனவில் தோன்றிய விநாயகர் மீண்டும் தன்னை அப்படியே பிரதிஷ்டை செய்து வழிபடும்படி வலியுறுத்த, அந்தக் குடும்பத்தினரும் அப்படியே செய்தார்களாம். அத்துடன் நான்கு திருக்கரங்கள் மற்றும் துதிக்கையுடன் பூரணத் திருவுருவில் வெண்கலக் கவசமும் செய்து அணிவித்துள்ளார்கள். நினைத்தது நிறைவேறவும், பிணிகள் நீங்கவும் இந்தப் பிள்ளையாரை வழிபட்டுச் செல்லும் பக்தர்கள், இவர் சந்நிதியில் தரப்படும் விபூதிப் பிரசாதத்தை பிணி தீர்க்கும் அருமருந்தாகவே கருதுகிறார்கள்!

- ஆ.நல்லசிவன் படம்: தி. ஹரிஹரன்

''தும்பிக்'கை’யான் தந்த நம்பிக்'கை’!''


இதோ விநாயகர் சதுர்த்தி நெருங்கிவிட்டது. அதையொட்டி ஒய்யாரமாக ஊர்வலம் வர, அழகுப் பிள்ளையார் சிலைகளும் ஊருக்கு ஊர் விதவிதமாய் தயாராகிவருகின்றன. எனினும், மானாமதுரை பிள்ளையார் சிலைகளுக்கு மவுசு அதிகம். காரணம், அந்தப் பகுதியில் கிடைக்கும் களி மண்ணின் தன்மை அப்படி என்கிறார்கள். இங்கு தயாராகும் பிள்ளையார் சிலைகள் இந்தியா முழுவதும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

மானாமதுரை பிள்ளையாரைப் போலவே, மானாமதுரையில் பிள்ளையார் சிலைகளைச் செய்வதையே தன் இறைப்பணியாகக் கொண்டிருக்கும் பாண்டிராஜனும் பிரசித்தி பெற்றுத் திகழ்கிறார்.

யார் இந்தப் பாண்டிராஜன்? அவர் அப்படி என்னதான் செய்கிறார்?

மானாமதுரையில் தலைமுறை தலைமுறையாக களிமண்ணால் சிலைகள் செய்து வரும் குடும்பத்தில் வந்தவர்தான் பாண்டிராஜன். அதனால் சிலைகள் செய்யும் திறமை அவருக்கு இயல்பிலேயே இருப்பதில் ஆச்சர்யம் இல்லைதான்.

ஆனால், பாண்டிராஜ் ஒரு மாற்றுத் திறனாளி! ஆம்... பிறவியிலேயே ஒரு கை மட்டும்தான் அவருக்கு! 'பிறகெப்படி கலைநுணுக்கத்துடன் அவரால் பிள்ளையார் சிலைகளைச் செய்யமுடிகிறது?’ என்று கேட்டால், ''எல்லாம் தும்பிக்கையான் தந்த நம்பிக்கைதான் காரணம்!'' என்று கூறிப் புன்னகைக்கிறார். இதோ... தமது 12 வயதில் துவங்கிய இந்தப் பணி குறித்து, அவரே விவரிக்கிறார்.

''எங்க குடும்பத்துல நான்தான் கடைசி பையன். எங்க அப்பா தட்சிணா மூர்த்தியும் என்னோட அண்ணன்களும் இதே தொழிலைத்தான் செஞ்சுக்கிட்டு வர்றாங்க. ஆனா, ஆரம்பத்துல என்னாலதான் சிலை செய்ய முடியலை. அவங்க சிலை செய்யறதை பார்த்துக்கிட்டே இருப்பேன். மற்ற நேரங்கள்ல மண் எடுக்கறது, காயவைக்கறதுன்னு சின்னச் சின்ன வேலைகளைச் செய்வேன். அப்புறம், கொஞ்சம் கொஞ்சமா நானும் சிலை செய்ய முயற்சி பண்ணினேன். சிலை செய்யறதைப் பார்க்கறதுக்கு சுலபமா தெரிஞ்சாலும், அதைச் செய்யும்போதுதான் அதுல இருக்கிற கஷ்டங்கள் எனக்குத் தெரிய வந்துச்சு. அதுலயும் ஒரு கையால சிலை செய்யறதுக்கு ரொம்பவே சிரமப்பட்டேன்.

ஒருகட்டத்துல, திகைச்சு நின்னுட்டேன். வாழ்க்கையை நெனச்சு ரொம்ப பயந்தேன். அப்ப, எங்க வீட்ல எல்லாரும் எனக்கு ஆதரவாவும் உதவியாவும் இருந்தாங்க. என்னை உற்சாகப்படுத்தினாங்க. நான் செய்யப்போறது விநாயகர் சிலைங்கறதால அவரை வணங்கிட்டு, அவர் மேல பாரத்தைப் போட்டுட்டு விநாயகர் சிலைகளைச் செய்ய ஆரம்பிச்சேன். இதோ... 12 வருஷம் ஓடிப்போயிடிச்சு. எல்லாத்துக்கும் காரணம் பிள்ளையாரோட திருவருள்தான்!

இடது கை இல்லையேன்னு என்னிக்கும் வருத்தப்பட்டது இல்லை. ஆனா, சில நேரம் களி மண்ணை எடுத்துப் பிள்ளையார் செய்யும்போது எரிச்சல் ஏற்படும். காரணமே தெரியாது. அப்பெல்லாம் 'நாம் செய்யும் சிலையைப் பல பேர் பூஜை அறையில் வச்சு வணங்குவாங்களே! நல்லபடியா செய்து தரணுமே’ன்னு நெனைச்சுப்பேன் எரிச்சல், கஷ்டம் எல்லாம் மறைஞ்சுடும். ஆரம்பத்துல, பிள்ளையாரைப் பத்தி எனக்குப் பெரிசா ஒண்ணும் தெரியாது. ஆனா, பிள்ளையார் சிலையைச் செய்ய ஆரம்பிச்ச பிறகு, விநாயகரைப் பத்திப் பல விஷயங்களைத் தெரிஞ்சுக்கிட்டேன்'' என்கிற பாண்டிராஜன் அந்த விஷயங்களை நம்மோடும் பகிர்ந்துகொண்டார்.

''விநாயகர் சதுர்த்திக்குக் களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகளை வழிபடறதுதான் விசேஷம்! விநாயகர் பஞ்சபூதத்துக்கும் அதிபதிங்கறதால அவருடைய சிலையைக் களிமண்ணால செஞ்சு வணங்கி வழிபட்டுட்டு, குளத்துல, கிணத்துல, கடல்லன்னு நீர்நிலைகள்ல கரைச்சிடறதுதான் முறை.

மானாமதுரையில செய்யற விநாயகர் சிலைங்களுக்கு தனி விசேஷம் இருக்கு. காரணம், மானாமதுரையில் மண் வளம் நல்லா இருக்கறதோடு, இரும்புச் சத்தும் இருக்கிறதால மண்ணுக்குப் பிடிப்புத் தன்மை அதிகமா இருக்கும். அதனால சிலை செய்யறதுக்கும் சுலபமா இருக்கும். இங்க செய்யற சிலைங்க எல்லாம் 'பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ்’ போன்ற கெமிக்கல் எதுவும் கலக்காம இயற்கையான முறையில்தான் செய்யறோம்'' என்றவர் தொடர்ந்து, தன்னுடைய சிலை தயாரிப்புப் பணி பற்றியும் விளக்கினார்.

''ஒரு நல்ல நாளில், விநாயகருக்கு பூஜைகள் செய்த பின்னர்தான், சிலைகள் செய்ய ஆரம்பிப்பேன். ஆறு அடி உள்ள சிலையைச் செய்ய, குறைஞ்சது 15 நாள் ஆகும். முதல்ல சுத்தமான களி மண்ணை எடுத்துட்டு வருவோம்.அதை சிலை செய்யறதுக்கு வசதியா பல நிலைகள்ல பக்குவப்படுத்துவோம். அப்பத்தான் அந்த மண், சிலை செய்யறத்துக்கு ஏதுவா இருக்கும். விநாயகர் சதுர்த்திக்கு 50 நாளுக்கு முன்னாடியே சிலை செய்ய ஆரம்பிச்சுடுவோம். சிலை செய்யறதுல பல நுணுக்கமான விஷயங்கள் உண்டு. அதை யெல்லாம் சரியா, கவனமா பார்த்துச் செய்யணும்னா ரெண்டு கைகளும் நல்லா இருந்தாத்தான் முடியும். அப்பெல்லாம் ஒரு கையையும், மற்றொரு முட்டியையும் வைத்துதான் செய்வேன். மத்தவங்க ஒரு நாள்ல முடிக்கிற வேலையை முடிக்க எனக்கு ரெண்டு நாள் ஆகும். அதனால காலைல நாலு மணிக்கே சிலை செய்ய வந்துடுவேன். வந்ததில் இருந்து சிலை தவிர வேற நெனைப்பே இருக்காது. முழுசா முடிச்சுட்டுத்தான் கிளம்பணும்கற நெனைப்பிலேயே இருப்பேன். எப்படியும் வீடு திரும்ப இரவு 10 மணி ஆயிடும். ஆனா, எப்பவும் சோர்ந்து போனதில்லை. சிலையைச் செஞ்சதும் காய வச்சு, மட்டிவெள்ளை சுண்ணாம்பு அடிப்போம். அப்புறமாத்தான் ஓலைச்சாயம் கொண்டு வண்ணம் பூசுவோம்'' என்று தனது அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்ட பாண்டிராஜன் இதுவரை பல ஆயிரம் சிலைகளைச் செய்திருக்கிறாராம். எனினும், ஒரு டன் எடையில் 9 அடி உயரத்துக்கு ஒரு பிள்ளையார் சிலையை தனியொரு ஆளாகச் செய்திருப்பதை இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும். பல்வேறு தோற்றங்களில் விநாயகர் சிலைகள் இருந்தாலும், பெரும்பாலும் பாண்டிராஜன் செய்வது அமர்ந்த நிலையில் இருக்கும் விநாயகர் சிலைகளைத்தான்.

விநாயகர் சிலைகள் மட்டுமின்றி, கார்த்திகை தீபத்துக்கான அகல் விளக்குகள், மண் சிலைகள், கோயில்களுக்குக் குதிரை சிலைகள் எனத் தன் பணிகளையே ஆன்மிகம் சார்ந்ததாக அமைத்துக் கொண்டிருக்கும் பாண்டிராஜனின் மனமெல்லாம் அந்த விநாயகப் பெருமானே வியாபித்து இருக்கிறார்.

மாற்றுத்திறனாளியாக இருந்தாலும், சிலை செய்கிறபோது தன்னையே மறந்து இறைவனுக்குத் தொண்டு செய்கிறோம் என்கிற ஒரே நினைப்போடு ஆத்மார்த்தமாகச் செய்யும் பாண்டிராஜனின் இறைப்பணி பாராட்டுதலுக்கு உரியது என்பதில் சந்தேகம் என்ன?!

ஹேரம்ப விநாயகர்!

விநாயகரின் திருவடிவங்களில் ஸ்ரீஹேரம்ப கணபதி வடிவமும் ஒன்று. 'ஹேரம்ப’ என்றால் சிங்கம் என்றும், எளியவர்க்கு அருள்பவர் என்றும் பொருள் கொள்ளலாம். பிரார்த்தனைகள் விரைவில் பலிதமாக சிம்மத்தின் மீது அமர்ந்த கணபதியை வழிபடவேண்டும் என்கின்றன ஞானநூல்கள். இதை மெய்ப்பிக்கும் வகையில் திகழ்கிறார் இந்த விநாயகர்.

நான்கு திசைகளுக்கு ஒன்றாக நான்கு முகங்களும்; மேல் நோக்கிய ஒருமுகமுமாக ஐந்து திருமுகங்களுடன் திகழ்வதால் பஞ்சமுக விநாயகர் என்றும் இவரை வழிபடுகிறார்கள். கிழக்கு முகம்- சூரிய அம்சம்; உடல் நலனுக்கும் விவசாய வளர்ச்சிக்கு வித்திடும். மேற்கு முகம்- விஷ்ணு அம்சம்; உயிர்களை காக்கும். வடக்கு முகம்- அம்பாளின் அம்சம்; ஜெயம் தரும். தெற்கு முகம்- பிரம்மனின் அம்சம்; திருமணம், குழந்தைப்பேறு மற்றும் வாக்குவன்மை அளிக்கும். மேல் நோக்கிய திருமுகம்- சிவ அம்சம்; சகல மேன்மைகளையும் தரும் என்கிறார்கள்.

இந்தப் பிள்ளையார் விக்கிரகத்துக்குக் கீழே காஞ்சி மகா பெரியவா அருளிய ஸ்ரீசக்ரம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது, கூடுதல் விசேஷம் ஆகும். நாமக்கல்லில் இருந்து கரூர் செல்லும் வழியில், நாமக்கல்லில் இருந்து சுமார் 21 கி.மீ. தொலைவில் பரமத்திவேலூர் எனும் ஊரில் கோயில் கொண்டிருக்கிறார் இந்தப் பிள்ளையார். தங்கத் தேரில் பவனி வரும் ஈச்சனாரி விநாயகர்
கணபதியே சரணம்!

மதுரையில் இருந்து ஸ்ரீவிநாயகரின் திருவுருவச் சிலையை எடுத்து வரும் வழியில், ஓரிடத்தில் அச்சு முறிந்து அங்கேயே நின்றது மாட்டுவண்டி. அப்போது, ''நான் இங்கேயே இருக்கிறேன்'' என அசரீரி கேட்க... விநாயகருக்கு அங்கே அற்புதமான கோயில் அமைந்தது என்கிறது ஸ்தல வரலாறு.

ஈச்சங்காடாக இருந்த இடத்தில் அமைந்த அந்த விநாயகர், ஈச்சங்காட்டு விநாயகர் என அழைக்கப்பட்டார். அதுவே பின்னாளில் ஈச்சனாரி விநாயகர் என அமைந்ததாகச் சொல்வர்.

கோவையில் இருந்து பொள்ளச்சி செல்லும் வழியில் அமைந்து உள்ளது இந்தத் திருத்தலம். நினைத்ததை ஈடேற்றித் தரும் ஈச்சனாரி விநாயகர் சந்நிதியில், புதிதாக வாகனம் வாங்கியவர்கள், சாவியை திருவடியில் வைத்து வணங்கி எடுத்துச் செல்கின்றனர். அதேபோல், அந்தச் சாலை வழியே செல்பவர்களுக்கு வழித்துணையாகவும் வருகிறார் விநாயகர் என்கிறார்கள் பக்தர்கள்!

இங்கு, 27 நட்சத்திரங்களுக்குமான நட்சத்திர பூஜை வெகு பிரசித்தம். அவரவர் நட்சத்திர நாளில் இங்கு வந்து வணங்கினால், வளமும் நலமும் பெற்று வாழலாம் என்பர். 

தமிழகத்திலேயே முதல் முறையாக ஸ்ரீவிநாயகப் பெருமானுக்கு என்று தனியே தங்கத்தேர் இங்கு செய்யப்பட்டு, இரவு 7 மணிக்கு தங்கத்தேரில் உலா வரும் வைபவம் நடைபெறுகிறது.

விநாயக சதுர்த்தி நாளில், ஈச்சனாரி பிள்ளையாரைத் தரிசிக்க, கோவை, ஈரோடு, பொள்ளாச்சி என பல ஊர்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் வந்து தரிசித்து செல்கின்றனர். அன்றைய நாளில், சர்வ அலங்காரத்தில் ஜொலிக்கும் விநாயகப் பெருமானைக் காணக் கண் கோடி வேண்டும் எனப் பூரிப்புடன் சொல்கிறார்கள் பக்தர்கள்!

Post a Comment

 
Top
Related Posts Plugin for WordPress, Blogger...