
'வேழமுகத்து விநாயகனை தொழ ஞானம் மிகுத்து வரும்' என்பது சான்றோர் வாக்கு. அதிலும் நிருதி நாயகராக தென்மேற்கு திசையில் அமர்ந்து அருள்பாலிக்கும் விநாயகரை வழிபடுவது விசேஷம்.
'நிருதி விநாயகரை வழிபடுவதால் காரியத் தடைகள் அகலும்; வேண்டும் வரங்கள் விரைவில் ஸித்திக்கும்; கல்வியறிவு பெருகும்' என்பது ஆன்றோர் வாக்கு.
சேலத்தில் இருந்து மேற்கே சுமார் 45 கி.மீ. தொலைவில் உள்ள எடப்பாடியில் அமைந்திருக்கிறது ஸ்ரீநஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில். தேவ- அசுரர்கள் பாற்கடலைக் கடைந்தபோது உருவான ஆலகால விஷத்தைப் பருகி, அனைவரையும் காப்பாற்றிய ஈசனின் திருவருளை நினைவுபடுத்தும் விதம் ஸ்ரீநஞ்சுண்டேஸ்வரர் எனும் திருநாமத்துடன் திகழ்கிறார் இந்தத் திருக்கோயிலின் இறைவன். அம்பாள்- ஸ்ரீதேவகிரி அம்மை.
கோயிலின் மற்றொரு சிறப்பம்சம்... நிருதி மூலையில் அதாவது தென்மேற்கு திசையில் தரிசனம் தரும் பிள்ளையார். இவர் வலம்புரி விநாயகராக திகழ்வது கூடுதல் சிறப்பு. சதுர்த்தி திருநாட்களில் இவருக்கு விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன. குறிப்பாக சங்கடஹர சதுர்த்தி அன்று, இவரை தரிசித்து வழிபட நம் சங்கடங்கள் யாவும் சிதறுண்டு போகுமாம்!
உத்தியோக உயர்வு, வேலைவாய்ப்பு, குழந்தை பாக்கியம் ஆகிய பிரார்த்தனைகளுடன் வரும் பக்தர்கள், இவருக்கு அருகம்புல் சார்த்தி மனமுருக வழிபட்டுச் செல்கின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக எடப்பாடி பகுதி மாணவர்களின் கண்கண்ட தெய்வமாக திகழ்கிறார் இந்தப் பிள்ளையார்.
தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற விரும்பும் மாணவ- மாணவியர் கோயிலுக்கு வந்து, பய பக்தியுடன் இவரை வழிபடுகின்றனர். மேலும், விநாயகரின் திருவடிக்கு அருகில் (தரையில்) தங்கள் தேர்வு எண்களை எழுதி வைத்து, 'பிள்ளையாரப்பா... பாஸ் மார்க் போதாது; ஃபர்ஸ்ட் மார்க் எடுக்க நீதான் அருள் புரியணும்' என நம்பிக்கையுடன் வழிபட்டுச் செல்கிறார்கள்.
இந்த வேண்டுதல்களை நிறைவேற்றி, மாணவர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றி அருள்புரிகிறார் இந்தத் தும்பிக்கையான்!
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.