GuidePedia

0
Temple images
செய்த நன்றியை மறக்காத மகர ராசி அன்பர்களே!

குரு பகவான் ராசிக்கு 6 ல் இருந்தார். அவர் பல்வேறு இன்னல்களை தந்திருப்பார். நிம்மதியை இழக்க செய்திருப்பார். உங்கள் நிலையில் இருந்து தடுமாறி பின்தங்கியிருப்பீர்கள். சிலருக்கு பொருளாதார சரிவு கூட ஏற்பட்டிருக்கலாம். தேவையற்ற வீண் பகையும் உருவாகியிருக்கும். தொல்லைகளை அனுபவித்து வரும் உங்களுக்கு வாழ்வில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் விதத்தில் குரு பகவான் 6 ல் இருந்து 7ம் இடத்திற்கு செல்கிறார். இது சிறப்பான நிலை. வாழ்வில் படிப்படியாக பலவித நன்மைகளைத் தர குரு காத்திருக்கிறார். குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்கச் செய்வார். சுப நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி மகிழ்வீர்கள். சமூகத்தில் செல்வாக்கு மேம்படும். கையில் எப்போதும் பணம் புழக்கத்தில் இருக்கும். குடும்பத் தேவை அனைத்தும் இனிதே பூர்த்தியாகும். வாழ்வில் ஆடம்பர வசதி பெருகும். மனதில் நினைத்த காரியத்தை உடனடியாக நிறைவேற்றுவீர்கள். அதோடு குருவின் 5-ம் இடத்துப் பார்வையாலும் சிறப்பான நன்மை ஏற்படும்.முக்கிய கிரகங்கள் சாதகமாக அமைவதால் இதனை ஒரு பொற்காலம் என்றே சொல்ல வேண்டும். ஆற்றல் மேம்படும். உங்களை விலகிச் சென்றவர் கூட வலிய வந்து உறவாடுவர். எதிரிகள் கூட உங்களைச் சரணடைய முன் வருவர். உறவினர் மத்தியில் செல்வாக்கு உள்ளவராக இருப்பீர்கள். நீண்ட காலமாக எதிர்பார்த்த விஷயம் கூட தற்போது நிறைவேற வாய்ப்புண்டு. குடும்பத்தில் பிள்ளைகள் வழியில் முன்னேற்றம் ஏற்படும். கணவன், மனைவி இடையே அன்பும், பாசமும் அதிகரிப்பதால் ஒற்றுமை சிறக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வசதியான வீட்டிற்கு குடிபோகும் நிலை ஏற்படும். தடைபட்ட வந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் சிறப்பான முறையில் நடந்தேறும். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். அடிக்கடி வீட்டிற்கு உறவினர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். சிலருக்கு புதிய வீடு வாங்கும் யோகம் தொடரும். விருந்து, விழா, இன்பச் சுற்றுலா பயணம் என அடிக்கடி செல்ல வாய்ப்புண்டாகும். சிலருக்கு புண்ணிய தலங்களைத் தரிசிக்கும் பாக்கியமும் கிடைக்கும். உச்சநிலையில் கடகத்தில் இருக்கும் குருவின் 5,7,9ம் பார்வைகள் முறையே ராசி, மூன்று, பதினொன்று ஆகிய ஸ்தானங்களில் பதிகிறது. இதன் மூலம் வாழ்வில் நன்மை காண்பீர்கள். இதனால், ஆரோக்கியம் மேம்படும். ஆயுள் விருத்தி உண்டாகும். சமூகத்தில் அந்தஸ்து மிக்க மனிதராக வலம் வருவீர்கள். தைரிய ஸ்தானமான மூன்றில் பதிவதால் மனக் குழப்பம் அடியோடு நீங்கும். விடாமுயற்சியுடன் செயல்பட்டு எதிலும் வெற்றி காண்பீர்கள். இளைய சகோதரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கும் துணை நிற்பீர்கள். இசை, நாட்டியம் போன்ற கலைகளில் ஆர்வமுடன் ஈடுபட வாய்ப்புண்டு. உறவினர் இல்லங்களில் நடக்கும் விருந்து, விழா என அடிக்கடி சென்று மகிழ்வீர்கள். மூத்த சகோதரர்களிடம் இருந்து வந்த கருத்துவேறுபாடு நீங்குவதோடு இணக்கம் அதிகரிக்கும். வாழ்வில் அவர்களின் வழிகாட்டுதலையும் ஏற்று நடப்பீர்கள். நாணயம் மிக்க மனிதராக கொடுத்த வாக்கை எப்பாடு பட்டாவது நிறைவேற்றி வைப்பீர்கள். 

தொழில், வியாபாரம்: உற்பத்தி சிறந்து நல்ல வருமானத்தைக் காண்பர். புதிய தொழிலைத் தொடங்கும் எண்ணமும் நிறைவேறும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். அரசிடமிருந்து எதிர்பார்த்த சலுகை வந்து சேரும். சிலர் வெளிநாட்டுடன் தொடர்பு கொண்டு தொழிலை விரிவுபடுத்துவர். உங்களிடம் வேலைபார்க்கும் ஊழியர்கள் நம்பிக்கையுடனும், நல்ல எண்ணத்துடனும் நடந்துகொள்வர். 

பணியாளர்கள்:  பணியாளர்களுக்கு நல்ல வளர்ச்சி ஏற்படும். முன்னேற்றத்திற்கு தடையாக இருந்தவர் கூட தானாகவே விலகிச் செல்வர். பதவி உயர்வு கிடைக்கும். சிலர் அதிகார அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர். சம்பள உயர்வு எதிர்பார்த்ததை விட அதிகமாக கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். விரும்பிய பணி, இடமாற்றம் கிடைக்கும். செப்டம்பரில் போலீஸ், பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் நற்பலன் பெறுவர். அரசாங்க வகையில் எதிர்பார்த்த உதவி கிட்டும். பணியிடத்தில் பெண்களின் ஆதரவும் நல்லமுறையில் கிடைக்கும். 

பெண்கள்: பெண்கள் வாழ்வில் உற்சாகத்துடன் செயல்படுவர். பெரியோர் ஆதரவும், ஆலோசனையும் நன்மைக்கு வழிவகுக்கும். அக்கம்பக்கத்தினர் உதவிகரமாக இருப்பர். தம்பதியினர் இடையே அன்பு மலரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

கலைஞர்கள்: கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெற்று வருமானம் காண்பர். பெரிய மனிதர்களின் தொடர்பு கிடைக்கும். 

அரசியல்வாதிகள்: அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் நல்ல வளத்தோடு புதிய பதவியும் கிடைக்கப் பெறுவர். மக்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். தொண்டர்களின் ஒத்துழைப்பு நல்ல விதத்தில் அமைந்திருக்கும். 

மாணவர்கள்:  கடந்த ஆண்டு இருந்து வந்த மந்த நிலை மாறும். கல்வியில் ஆர்வம் கூடும். கூடுதல் மதிப்பெண் பெறலாம். மேற்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். போட்டி, பந்தயத்தில் அடிக்கடி கலந்து கொண்டு வெற்றி பெறுவர்.

விவசாயிகள்:  நல்ல மகசூலைக் காண்பர். அனைத்து பயிர்களிலும் நல்ல வருமானம் கிடைக்கும். புதிய சொத்து வாங்கலாம். நவீன விவசாயம் மூலம் விவசாயப்பணியை மேம்படுத்துவர். வழக்கு விவகாரத்தில் சாதகமான சூழல் நிலவும். இழந்த சொத்து மீண்டும் கைக்கே வந்து சேரும். 

உடல்நலம்:   உடல் நிலை சிறப்பாக இருக்கும். 2015 பிப்ரவரியில் கண் தொடர்பான உபாதைகள் வரலாம். 

குரு அதிசார பலன்!

குருபகவான் டிசம்பர் 3 ல் அதிசாரம் பெற்று சிம்ம ராசிக்கு மாறுகிறார். 22-ந் தேதி வரை அங்கு இருப்பார்.  இந்த சமயத்தில் குரு பகவானால் மனதில் குழப்பம் உருவாகும். தேவையற்ற பிரச்னைகள் வாழ்வில் குறுக்கிடும். பொருளாதார சரிவும் உண்டாகலாம். வீண் சச்சரவால் உறவினர் பகை ஏற்படும். 

பரிகாரம்!

கிருஷ்ணரை வணங்கி ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். ராகு சாதகமற்ற நிலையில் இருப்பதால் அவருக்கு அர்ச்சனை செய்யுங்கள். பாம்பு புற்றுள்ள கோவிலுக்கு சென்று வரலாம். ராகு காலத்தில் நடக்கும் பைரவர் பூஜையில் கலந்து கொள்ளவும். டிசம்பர் 16 வரை விநாயகரையும், ஆஞ்சநேயரையும் வணங்கி வாருங்கள். நவக்கிரகங்களை வலம் வந்து வணங்குங்கள். காக்கைக்கு அன்னமிட்டு உண்ணுங்கள். வசதி படைத்தவர்கள் பசு தானம் செய்யலாம். 

பரிகாரப்பாடல்!

அருமறை முதல்வனை ஆழி மாயனைக் கருமுகில் வண்ணனைக் கமலக் கண்ணனைத் திருமகள் தலைவனை தேவ தேவனை இருபத முளரிகள் இறைஞ்சி ஏத்துவாம்.

Post a Comment

 
Top
Related Posts Plugin for WordPress, Blogger...