அவளுக்கு சதுரங்க சேனா நாயிகா என்றொரு திருநாமம் உண்டு. அதாவது அம்பிகையின் நால்வகைப் படைகளுக்கும் சேனாதிபதியாகத் திகழ்பவள் என்று அர்த்தம். இவளை, தண்டினி என்றும் சொல்வர். சப்த மாதர்களில் ஒருவரான இவள்...ஸ்ரீவாராஹி! சிறந்த வரப்பிரசாதி.
நம் மனத்துள் எண்ணங்கள் தோன்றினால் மட்டும் போதாது. அது காரியமாக, செயலாக மாறவேண்டும் அல்லவா? அப்படி எண்ணத்தைக் காரியமாக மாற்றும் சக்திதான், ஸ்ரீவாராஹி தேவி. ஒட்டுமொத்த பிரபஞ்ச சக்தியைக் குறிப்பவளுக்கு நம் மனத்தை அறிந்துகொள்வதெல்லாம் எம்மாத்திரம்?
ஆடி மாதத்தில் ஸ்ரீவாராஹியை வழிபடுவது சிறப்பு. இந்த மாதத்தில், ஆஷாட நவராத்திரி நாட்களிலும் ஆடி மாதத்தில் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் ஸ்ரீவாராஹிதேவிக்கு சர்க்கரைப் பொங்கல், உளுந்து சாதம், வடை, தயிர்சாதம் என இவற்றில் ஒன்றைக் கொண்டு நைவேத்தியம் செய்து (பால் சாதம், திலா அன்னம், எள்ளுருண்டை நைவேத்தியமும் செய்யலாம்), மல்லி, முல்லை, நீலசங்கு புஷ்பம், கருந்துளசி, வில்வம், மருக்கொழுந்து, செந்தாமரை, வெண்தாமரை ஆகிய பூக்களால் அர்ச்சித்து வழிபட்டால், சகல ஐஸ்வரியங்களும் பெறலாம்.
ஸ்ரீவாராஹிக்கு உகந்த சிவப்பு, நீலம் மற்றும் பச்சை புடவையைச் சார்த்தி வழிபடுவது, கூடுதல் பலனைத் தரும்.
தமிழகத்தில் சிவாலயங்கள் பலவற்றிலும் சப்தமாதர்களுக்கு சந்நிதிகள் உள்ளன. குறிப்பாக, தஞ்சாவூர் பெரியகோயில் முதலான சில ஆலயங்களில், ஸ்ரீவாராஹி தேவிக்கு தனியே சந்நிதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தேஹி மே சகலான் காமான் வாராஹி ஜகதீஸ்வரி
நமஸ்துப்யம் நமஸ்துப்யம் நமஸ்துப்யம் நமோ நம:
இது, ஸ்ரீவாராஹியின் மூலமந்திரம். இதனை செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மனம் ஒருமித்து, முடிந்தவரைக்கும் சொல்லி வழிபட்டால், வீட்டில் உள்ள பிரச்னைகள் காணாது போகும். எதிரிகள் தொல்லைகள் நீங்கும். பிரிந்த தம்பதி ஒன்று சேருவர். வாழ்வில் நிம்மதியும் சந்தோஷமும் பொங்க வாழலாம்!
ஸ்ரீவாராஹி தாயே... உன் திருவடி சரணம்!
- வி.ராம்ஜி
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.