
முன்காலங்களில் கோயில்களைப் பூட்டிச் சாவியை வெளிப் பிராகாரத்தில் காணப்படும் பைரவர் சந்நிதியில் வைத்துவிடுவார்களாம். பைரவர் தன் வாகனமான நாயுடன் கோயிலைச் சுற்றி உலா வந்து கொண்டிருப்பார் என்றும், பலர் கண்களிலும் பட்டிருக்கிறார் என்றும் கூறுவார்கள். சிதம்பரத்தில் பைரவர் தனம் தருபவராக இருந்திருக்கிறார். தில்லை வாழ் அந்தணர்கள், தங்கள் பிழைப்புக்குப் பணமோ, பொருளோ இல்லாமல் வருந்த, ஈசன் உடனே பைரவருக்கு ஆணையிட ஒவ்வொரு நாளும் இரவில், பைரவர் பொற்காசுகளை நடராஜர் சந்நிதியில் வைத்து விடுவார் என்றும், அதைக் காலையில் அன்றாட வழிபாட்டுக்கு வரும் தீட்சிதர்கள், தங்களுக்குள் பங்கிட்டுக்கொள்வார்கள் என்றும் சிதம்பரம் வாழ் தீக்ஷிதர்கள் தெரிவித்து உள்ளனர். பைரவர் என்றாலே பயங்கரமான ஆள் என்றே அர்த்தம். பாதுகாவலர் என்பதால் பெண்கள் இவரை வழிபட்டால் பெண்களுக்குப் பாதுகாவலாக இருந்து காத்துவருவார். வைரம் எப்படி உறுதியாக இருக்கிறதோ அவ்வாறே இருவரும் உறுதியாகத் தன் காவல் வேலையைச் செய்து வருவதால் சில இடங்களில் இவர் வைரவர் எனவும் அழைக்கப்படுகிறார்.
சேலம் மாவட்டம் ஆத்தூருக்கு அருகில் உள்ளது ஆறகலூர். இங்கே, அஷ்ட பைரவர்களும் சந்நிதி கொண்டு அருள்பாலிக்கிறார்கள். வசிஷ்ட முனிவர், நதிக்கரையின் பல இடங்களில் தவம் புரிந்தார். அதனால் அந்த நதிக்கு வசிஷ்ட நதி என்றே பெயர் அமைந்தது. ஒவ்வொரு இடங்களிலும் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்த வேளையில், வசிஷ்டர் விரும்பியது போலவே, லிங்கத் திருமேனியில் ஜோதி வடிவினராகப் புகுந்து அருள்பாலித்தார் சிவனார். அதையடுத்து, பல நூறு வருடங்கள் கழித்து, இந்தப் பகுதியை ஆட்சி செய்தான் கெட்டிமுதலி எனும் குறுநிலமன்னன். தினமும் சிவனை வணங்கிய பிறகே எந்தச் செயலையும் செய்வது மன்னனின் வழக்கம். ஒருநாள் அவன் கனவில் தோன்றிய சிவன், இங்கே மண்ணுக்கு அடியில் இருப்பதாகவும் தனக்குக் கோயில் எழுப்பும்படியும் அறிவிக்க, விடிந்ததும் இறைவன் குறிப்பிட்ட இடத்தைத் தோண்டி, லிங்கத்தை எடுத்து பிறகு கோயிலைக் கட்டினான் என்கிறது ஸ்தல வரலாறு.
ஸ்வாமியின் திருநாமம் - ஸ்ரீகாயநிர்மாலேஸ்வரர். காயம் எனப்படும் உடலை நிர்மலமாக அதாவது பரிசுத்தமாக ஆக்கி, அருள்புரிவார் சிவனார் என்று பொருள். தவிர, காமனுக்கு இறைவன் காட்சி தந்த இடம் என்பதால், காமநிர்மலேஸ்வரர் எனத் திருநாமம் அமைந்ததாகவும் அதுவே காயநிர்மலேஸ்வரர் என்றானதாகவும் சொல்வர்.
முக்கியமாக, இந்தத் தலத்தில், அஷ்ட பைரவர்களும் அருள்பாலிக்கிறார்கள். இங்கே உள்ள தலையாட்டிப் பிள்ளையாரும் சாந்நித்தியமானவர். தலையை இடதுபுறமாக சற்றே சாய்த்தபடி அருளும் கணபதி கொள்ளை அழகு. முதலில், காலபைரவர். இவர் கோயில் கோபுரத்தில் தரிசனம் தருகிறார். அடுத்து, குரோதான பைரவர். உள்ளே நுழைந்ததும் இடது புறத்தில் காட்சி தருகிறார். அவரை அடுத்து, அசிதாங்க பைரவர் மூலவரின் இடது பக்கத்தில் சந்நிதி கொண்டிருக்கிறார். இவரை அடுத்து, சண்ட பைரவர், நவக்கிரக சந்நிதிக்கு அருகில் காட்சி தருகிறார். அடுத்து, பீஷ்ண பைரவர், கோயிலுக்கு வெளியே மதிலில் வலதுபக்கத் தூணில் காட்சி தருகிறார். அங்கே எட்டுத் தூண்கள் இருக்கின்றன. இவற்றை, அஷ்ட பைரவத் தூண்கள் என்கிறார்கள் பக்தர்கள். இங்கு வழிபட்டால், எட்டு பைரவர்களையும் வணங்கி வழிபட்டதற்கு சமம் என ஐதீகம்!
அடுத்து, உன்மந்த பைரவர், கால சம்ஹார பைரவர், ருத்ர பைரவரைத் தரிசிக்கலாம். இந்த எட்டு பைரவர்களையும் தரிசித்து மனதாரப் பிரார்த்தித்தால், நம் கவலைகளெல்லாம் காணாமல் போகும். துன்பம் அனைத்தும் பறந்தோடும் என்கின்றார்கள் பக்தர்கள்! வாழ்வில் ஒருமுறையேனும் பைரவ வழிபாடு செய்யுங்கள். அவரை மனதார வணங்குங்கள். சிவனாருக்கே காவல் தெய்வமாகத் திகழ்பவர், சிவனடியார்களாகிய நமக்கும் அப்படியே இருந்து, நம்மைக் காத்தருள்வார்!
- சி.எம்.ஆனந்த பார்த்திபன் (கோவை)
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.