GuidePedia

0
தமிழகம் முழுக்க உள்ள கிராமங்களில் எண்ணற்ற எல்லை தெய்வங்கள் உண்டு. அவற் றின் வரலாறுகளும் சிறப்புகளும் மெய்சிலிர்க்கச் செய்பவை. கேட்கக் கேட்கத் திகட்டாத அந்த கிராம தெய்வங்கள் கதைகளில், ஏழு பெண் தெய்வங்களின் கதை பிரசித்தி பெற்றது. அவற்றில் ஒரு சுவைமிக்க வரலாறு இங்கே...

பொதிகை மலை அடிவாரத்தில் வாழ்ந்த ஒரு விவசாயிக்கு ஏழு பெண் பிள்ளைகள் இருந்தனர். அவர்களுக்குத் திருமணம் செய்துவைக்க முடியாமல் பெற்றோர் தவிக்க, அந்த ஏழு கன்னிப் பெண்களும் ஆற்றங்கரையில் மண்ணால் சிவலிங்கம் செய்து, தங்கள் பெற்றோரின் கவலையைப் போக்குமாறு சிவபெருமானை வேண்டினர்.

அவர்கள் பக்திக்கு இரங்கிய சிவபெருமான் ஒரு திருவிளையாடல் புரிய எண்ணினார். ஒரு விவசாய இளைஞன்போல உருவெடுத்து அங்கு சென்று, பூஜை செய்து கொண்டிருந்த பெண் களைத் தழுவ முயன்றார். "யாரோ ஒருவன் வந்து நம்மை மானபங்கப்படுத்தப் பார்க்கிறானே' என்று மிரண்டு போன பெண்கள், திசைக் கொருவராகக் காட்டிற்குள் ஓடியொளிந்தனர்.

இப்படிப் பிரிந்துபோன சகோதரிகள் மீண்டும் ஒன்று சேர ஓராண்டு ஆகிவிட்டது. அந்த ஏழு சகோதரிகளில் காத்தாயி என்பவள் மட்டும் இடுப்பில் கைக்குழந்தையை வைத்துக் கொண்டு வந்தாள்.

மற்ற சகோதரிகள் குழப்பமடைந்து, ""உனக்கு ஏது இந்தக் குழந்தை?'' எனக் கேட்டனர்.

அதற்கு காத்தாயி, ""பூஜை செய்தபோது நம்மைத் துரத்திய அந்த ஆண்மகன் என்னைப் பிடித்து பலவந்தப்படுத்தி விட்டான். அதனால் உண்டானது இந்தக் குழந்தை'' என்றாள்.

ஆனால் அதை சகோதரிகள் நம்பவில்லை.

""என்னை நீங்கள் நம்பவில்லையா? என்மீதே சந்தேகப்படுகிறீர்களே. நான் சொல்வது உண்மை என்று நிரூபிக்க நான் என்ன செய்ய வேண்டும்?'' என்று அழுதபடி கேட்டாள்.

""நீயும் உன் குழந்தையும் தீயில் இறங்கி வந்தால் நீ சொல்வதை உண்மை என நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்'' என்றனர் மற்ற சகோதரிகள்.

அதன்படியே தீ மூட்டிய காத்தாயி, அதில் தன் குழந்தையோடு இறங்கி நடந்து வந்தாள்.

அப்போது அவர்களுக் குக் காட்சி கொடுத்த சிவ பெருமான், ""இவையெல் லாம் என் திருவிளையாடல் களில் ஒன்று. நீங்களெல் லாம் எம்மைக் கண்டு பயந்து ஓடி ஒளிந்த அந்த ஏழு ஊர்களிலேயே தெய் வங்களாய் குடிகொண்டு மக்களின் துயரங்களைப் போக்குங்கள். மக்களும் உங்களையே முதன்மைப் படுத்துவார்கள். உங்களுக்கு ஏவலர்களாக- காவலர் களாக பூமாலையப்பர், செம்மலையப்பர், முத்தையா, ராயப்பா, கருப் பையா உள்ளிட்ட ஏழு முனிகளும் உடனிருந்து செயல்படுவார்கள்'' என்றருளி மறைந்தார். அவர்களும் அவ்வாறே கோவில் கொண்டார்கள்.

சன்னாசி நல்லூர் பார்வதி அம்மன், புலியூர் பட்டத்தாள், காளிங்கராய நல்லூர் அருந்தவம், வ. சித்தூர் பூவாள், குமாரை பச்சையம்மன், வெங்கனூர் மறலியம்மன் என்னும் காத்தாயி, அரகண்ட நல்லூர் பூங்காவனம் ஆகியோரே அந்த ஏழு தெய்வங்கள். இவர்களில் சன்னாசி நல்லூர் பார்வதி அம்மன் மூத்தவள். மேற்கண்ட ஏழு ஊர்களும் பெரம்பலூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் அமைந்துள்ளன.

""இந்த ஏழு ஊர்களிலும் இந்த ஏழு அம்மன் களின் ஆட்சிதான் கொடிகட்டிப் பறக்கிறது. இந்த ஏழு ஊர்களில் மட்டுமல்ல; மற்ற கிராமங் களிலும் தீமிதித் திருவிழா நடைபெற இதுவே காரணம்'' என்கிறார்கள் காளிங்கநல்லூர் கோவில் தர்மகர்த்தா பெரியசாமி, பூசாரி சண்மு கம் வாத்தியார், தங்கராசு மற்றும் சன்னாசி நல்லூர் சதாசிவம் ஆகியோர்.

ஆடி மாதம் முதல் வெள்ளியன்று சன்னாசி நல்லூர் பார்வதி அம்மன் கோவிலில் தீமிதி விழா தொடங்கும். அதற்கு அடுத்த வெள்ளி புலியூர் அம்மனுக்கும், அடுத்த வெள்ளி சித்தூர் அம்ம னுக்கும், அடுத்த வெள்ளி குமாரை பச்சையம்மன் மற்றும் காளிங்கராய நல்லூர் அருந்தவத்திற்கும், அடுத்து வெங்கனூர் காத்தாயிக்கும், கடைசி வெள்ளி அரகண்ட நல்லூர் பூங்காவனத்தம் மனுக்கும் தீமிதித் திருவிழா நடக்கும். இப்படி வரிசையாக நடப்பது இங்கு மட்டுமே என்கி றார்கள்.

இந்த ஏழு கோவில்களையும் பச்சையம்மன் கோவில்கள் என்றே அழைக்கின்றனர். ஆனால் குமாரை அம்மனுக்குதான் பச்சையம்மன் என்று பெயர். அடர்ந்த வனம் போன்ற பகுதி, கோவிலுக் கு எதிரே ஓடை, அதன் கரைகளில் அடர்ந்த ஆல மரங்கள், நாக மரங்கள் என மிக அமைதியான சூழலில் அமைந்துள்ளது குமாரை பச்சையம்மன் கோவில்.

""இங்குள்ள ஒவ்வொரு தெய்வங்களுக்கும் ஒவ் வொரு பெருமைகள் உண்டு'' என்ற ஊர் பெரியவர்கள் வெங்கடாசலம், கலிய பெருமாள் ஆகியோர், ""இந்தப் பச்சையம்மன் நிகழ்த்திய அதிசயங்கள் ஏராளம். 1995-ஆம் ஆண்டு அரியலூர் மாவட்டம், அழகாபுரம், வயலூர் உட் பட பல கோவில்களில் சிலை திருட்டுகளும், உண்டியல் திருட்டுகளும் தொடர்ந்து நடந்தன. இதைக் கண்டுபிடிக்க அமைக்கப்பட்ட தனி போலீஸ் படையும் திணறிக் கொண்டிருந்தது. சிலை தடுப்பு போலீஸ் சாமி சிலைகள் தயார் செய்யப்படும் கும்பகோணம் பகுதிக்குச் சென்று சிலை செய்பவர்களிடம், "சாமி சிலைகளை யாராவது விற்கவோ பரிசோதிக்கவோ இங்கு கொண்டு வந்தால் எங்களுக்கு உடனே தகவல் கொடுங்கள்' என்று சொல்லியிருந்தனர். அதே சமயத்தில் அழகாபுரம் என்ற ஊரில் சாமி சிலை கள் களவு போனது. அதில் அழகான பால முருகன் சிலையும் உண்டு. இந்த சிலையில் தங்கம் கலந்திருக்கிறதா என்று பரிசோதனை செய்ய ஒரு கும்பல் காரில் சிலையோடு கும்பகோணத்திற்குச் சென்றது.

அங்கு சிலை செய்பவர்களிடம் கொடுத்து சோதித்து, தங்கம் இல்லை என்று தெரிந்ததும் சிலையோடு மீண்டும் அந்த கும்பல் புறப் பட்டது. உடனே சிலை செய்பவர்கள் போலீஸுக் குத் தகவல் கொடுத்தனர். காரில் வந்த கும்பல் ஓலையூர் என்ற கிராமத்திலிருந்து வந்ததாகச் சொன்னார்கள். உடனே போலீஸார் புலன் விசாரணை செய்து, ஓலையூரைச் சேர்ந்த ஒரு பூசாரி தலைமையிலான ஏழு பேர் கொண்ட கும்பல்தான் சிலை, உண்டியல் திருட்டில் ஈடுபட்டுள்ளனர் என்பதைக் கண்டுபிடித்தனர். உடனே போலீசார் மாறு வேடத்தில் ஓலையூர் பூசாரியிடம் சென்று, "நாங்களும் சிலை கடத்து பவர்கள்தான். வெளிநாடுகளுக்கு விற்க எங்களுக்கு அழகான சாமி சிலைகள் வேண்டும்' என்று சொல்ல, பூசாரி கும்பலும் நம்பி விட்டது. "கையில் இருக்கும் சிலைகள் சிதைந் தவை. அதனால் இரண்டு நாள் கழித்து வாருங்கள்; உங்களுக்கு மிக அழகான சிலைகளைத் தருகிறோம்' என்று உறுதி கொடுத்தனர். போலீஸும் திருடர்களுக்கு வலைவிரித்துப் பிடிக்கும் எண்ணத்தில் சென்று விட்டனர்.

ஏற்கெனவே பூசாரி கும்பல் காட்டின் நடுவே இருந்த குமாரை அம்மன் கோவிலை நோட்டம் பார்த்து வைத்திருந்தது. அன்று மாலையே மூன்று பேர் சாக்குப் பைகளோடும், பூசாரி தன் மனைவியோடும் யாரும் சந்தேகப்படாதபடி ஓலையூரிலிருந்து குமாரைக்கு இரவோடு இரவாக சைக்கிளில் வந்தனர். கோவில் மதில் சுவரில் ஏறி உட்கதவின் பூட்டை உடைத்து, அங்கிருந்த விநாயகர், பச்சையம்மன், முருகன் ஆகிய மூன்று சிலைகளை சாக்கு மூட்டையில் கட்டிக் கொண்டு, உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தையும் மூட்டை கட்டிக் கொண்டு ஓலையூர் சென்றுவிட்டனர்.

போலீசார் பூசாரி சொன்னபடி இரண்டு நாட்கள் கழித்து சிலை வாங்க வந்தனர். பூசாரி கும்பல் வைக்கோல் போரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குமாரை கோவில் சிலைகளை எடுத்துக் கொடுத்து விலை பேசும்போது, போலீஸ் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து அவர்களைக் கைது செய்தனர். பூசாரி கும்பலிடம் விசாரணை செய்ததன் மூலம் திருடு போன மற்ற கோவில் சிலைகளையும் போலீஸார் மீட்டனர். இந்த விஷயத்தை போலீஸ் அதிகாரிகள் எங்கள் ஊருக்கே வந்து விளக்கிச் சொன்னதோடு, சிலை களை ஒப்படைத்து, "உங்க ஊர் பச்சையம் மன் மிகவும் சக்தி வாய்ந்தவள். இந்த அம்மனே திருடர்களைப் பிடிக்க எங்களுக்கு உதவி செய்ததுபோல் உள்ளது' என்று கூறி, மிகவும் சக்தி வாய்ந்த அம்மனை வழிபாடு செய்துவிட்டுச் சென்றனர்'' என்றார்கள்.

""இந்த அம்மன் கோவிலிலுள்ள பூமாலையப்பர், முத்தையா ஆகிய காவல் தெய்வங்கள் இருவரும் அண்ணன்- தம்பி கள். இவர்கள் இருவரும் அடிக்கடி தென் பகுதிக் காட்டுக்கு இரவில் வேட்டையாடவும் அம்ம னின் கட்டளையை நிறைவேற்றவும் போவதுண்டு. ஒருமுறை இருவரும் வேட்டைக்குப் போய்விட்டு பெருமுளை கிராமத்தை ஒட்டிய ஏரிக்கரையில் சங்கமுள் காட்டில் வரும் போது முத்தையா காலில் முள் தைத்துவிட்டது. உடனே அண்ணன் பூமாலையிடம், "நீங்க முன்னாடி போங்க. என் காலில் பட்ட முள்ளை எடுத்துவிட்டு பின்னாடி வருகிறேன்' என்று சொல்லிவிட்டு உட்கார்ந்து கொண் டார் முத்தையா. முள்ளை எடுப்பதற்குள் விடிந்து விட்டது.

விடிந்தும் தம்பி வராததைக் கண்டு பூமாலையப்பர் மீண்டும் பெருமுளையை நோக்கி குதிரையில் வேகமாக வந்தார். அப்போது அந்த ஏரிக்கரையில் ஏற்கெனவே குடிகொண்டிருந்த சிறு தெய்வங்கள் கும்பலாகச் சூழ்ந்துகொண்டு, "இந்த இடத்தைவிட்டு எழுந்து போ. இது எங்க இடம்' என்று முத்தையாவிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தன. இதைப் பார்த்த பூமாலையப்பர் குதிரைமீது இருந்தபடியே கோபமாக தனது ஈட்டியைத் தூக்கி வீசினார். உடனே சிறு தெய்வ கும்பல் பயந்து ஓடிவிட்டது. தம்பி முத்தையாவை, "இனி இங்கு இருக்க வேண்டாம்; புறப்படு. குமாரைக்குப் போகலாம்' என்று கூப்பிட் டார்.

"அண்ணா! எனக்கு இந்தப் பெருமுளை ஏரிக்கரையே ரொம்பவும் பிடித்துப் போய்விட்டது. நான் இங்கேயே தங்கிக் கொள்கிறேன்' என்று முத்தையா சொல்ல, அண்ணன் பூமாலையின் முகம் வாடிப் போனது. "என்னண்ணா ஒருமாதிரியா ஆகிட்டீங்க' என முத்தையா கேட்க, "எனக்கு நீ தம்பியா இருந்தாலும் இனி உனக்கு தான் மக்கள் முதல் மரியாதை தருவார்கள். ஏனென்றால் உன்னைத் தாண்டிதான் மக்கள் என்னைப் பார்க்க குமாரைக்கு வரவேண்டும்' என்று பூமாலையப்பர் வருத்தம் மேலிடச் சொல்லவே, பதறிப் போன தம்பி, "என்னண்ணா இப்படிச் சொல்லிட்டீங்க? உங்களுக்குதான் எப்போ தும் முதல் மரியாதை. முதலில் உங்களை வந்து வணங்கிப் பூஜை செய்த பிறகே மக்கள் என்னிடம் வருவார்கள். இது சத்தியம்' என்று அண்ணன் கையில் அடித்து சத்தியம் செய்து கொடுத்தார் முத்தையா.

அதேபோன்று இன்று வரை எவ்வளவு மக்கள் இவர்களைக் கும்பிட வந்தாலும் பெருமுளையைத் தாண்டி உள்ள குமாரைக்குச் சென்று பூமாலையப்பரை வழிபட்டபிறகு, மீண்டும் திரும்பி வந்துதான் முத்தையா சாமியை வழிபாடு செய்து வருகிறார்கள். இதுமட்டுமல்ல; ஒவ்வொரு பங்குனி மாதம் நடைபெறும் பாரிவேட்டைத் திருவிழா முதல் நாள் குமாரை யில் நடைபெறும். அதற்கு மறுநாள் அதே மாதிரி பாரிவேட்டைத் திருவிழா பெருமுளை முத்தையா வுக்கு நடத்துகிறார்கள். இது காலம் காலமாக நடந்து வருகிறது'' என்கிறார்கள் வெங்கடாசலமும் கலியபெருமாளும்.

நாமக்கல் மாவட்டம், மலை வேப்பன்குட்டை கிராமத்தைச் சேர்ந்த குமாரசாமி என்பவர், "எங்கள் குலதெய்வம் இந்தக் கோவில்தான். எங்களுக்கு மட்டுமல்ல; இந்த ஏழு அம்மன் களையும் காவல் தெய்வங்களையும் தங்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகிறார்கள் தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, திருவண்ணா மலை, கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர் உட்பட பத்திற்கும் மேற்பட்ட மாவட்ட மக்கள். இந்த தெய்வஅருள் மிக அபாரமானது. என்னையே இந்த கோவில் திருப்பணி செய்யும் பணிக்கு அம்மன் அழைத்து வந்த அதிசயத்தை எப்படிச் சொல்வது? கடந்த ஆண்டு ஒரு நாள் நல்ல தூக்கத்தில் நான் இருந்தபோது ஒரு கனவு. மஞ்சள் பாவாடை, சட்டையோடு சிறுமி ஒருத்தி என்னிடம் வந்து, "என்னை மறந்துவிட்டாயா? என்னைப் பார்க்க வர மாட்டாயா?' என்று கேட்டு தட்டி எழுப் பியது. திடீரென விழித்துக் கொண்டேன். பிறகு தூங்கவே இல்லை. விடியற்காலை யிலேயே புறப்பட்டு குமாரை அம்மனை வந்து வணங்கி நின்றேன். என்ன அதிசயம்! நான் கனவில் பார்த்த அதே மஞ்சள் பாவாடை, சிவப்பு சட்டையில் அம்மன் காட்சி அளித்தாள்!

அப்போது ஊர் முக்கியஸ்தர்கள் கோவில் கட்டும் திருப்பணி சம்பந்தமாகப் பேசி முடித்தனர். அவர்களோடு நானும் இணைந்து கொண்டேன். இந்த திருப் பணியின் கணக்கு, வழக்குகள் பொறுப்பை அம்மன் உருவத்தில் இவ்வூர் மக்கள் என்னிடம் ஒப்படைத்துள்ளனர். இனி கோவில் திருப்பணி செய்து கும்பாபிஷே கம் முடிந்த பிறகே ஊருக்குச் செல்வது என முடிவெடுத்தேன். என் முடிவு மட்டு மல்ல; அம்மனின் கட்டளை என்பதையும் உணர்ந்து கொண்டேன்'' என்றார் குமாரசாமி.

""எனக்குத் திருமணமாகி 18 ஆண்டு களாக குழந்தைப்பேறு இல்லை. காலை, மாலை காளிங்கராயநல்லூர் அம்மனே கதி என்று நடையாய் நடந்து கும்பிட்டேன். அதன் பிறகு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இப்போது மகன், மகள், பேரன், பேத்தி என்று சந்தோஷமாக எங்கள் வம்சம் தழைத்துள்ளது. இந்த ஏழு அம்மன்களில் ஒருத்தியான பட்டத்தாள் என்ற பெயரையே எனக்கும் எனது பெற்றோர்கள் வைத்துள்ளனர்'' என்கிறார் பட்டத்தாள் என்ற மூதாட்டி.

குமாரை கோவிலில் ஆங்கிலேயர் காலத்தில் தீமிதித் திருவிழா நடைபெற்றது. அப்போது ஆங்கிலேயர் ஒருவர், "என்னங்கடா திருவிழா, தீமிதி' என்று கிண்டலாகக் கேட்டபடியே பார்க்க வந்தார். மக்கள் அம்மனுக்கு தீ மிதிப்பதை தனது பைனாகுலர் மூலம் பார்த்தார் பிரபு. அப்போது தீக்குழிக்கு மேலே அம்மன் தன் முந்தானையை இரு கைகளாலும் விரித்தபடியே இருக்க, பெண்கள் உட்பட பக்தர்கள் எல்லாரும் அதன்மீது நடந்து போனார்கள். "என்ன வியப்பு இது! இப்படியும் மக்களைக் காக்குமா சாமி?' என்று தான் பைனாகுலர் மூலம் பார்த்த காட்சியைத் தன்னுடன் வந்தவர்களுக்கு விளக்கிச் சொன்னதோடு, கோவிலுக்குள் வந்து சாமியை தரிசனம் செய்துவிட்டுச் சென்றாராம் அந்த ஆங்கிலேயர்.

தமிழகம் முழுவதும் எண்ணற்ற பச்சையம்மன்கள் ஊருக்கு ஊர் இருந்தா லும், அவர்களுக்கெல்லாம் முன்னோடி யான தெய்வம்தான் இந்த பச்சையம்ம னும் இவளது சகோதரிகளும் என்கிறார் கள் குமாரை உட்பட ஏழு கிராம மக்க ளும்!

கோவில்களின் இருப்பிடம்

கடலூர் மாவட்டம், திட்டக்குடியிலிருந்து வடக்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் பெருமுளை முத்தையா கோவிலும்; அங்கிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் குமாரை பச்சையம்மன், பூமாலையப்பர் கோவி லும்; திட்டக்குடியிலிருந்து மேற்கே 15 கிலோமீட்டர் தூரத்தில் சித்தூர், வெங்கனூர் அம்மன் கோவில்களும்; திட்டக்குடியிலிருந்து தென்கிழக்கே வெள்ளாற்றைக் கடந்து ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் காளிங்கராய நல்லூர் அம்மனும்; அங்கிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் சன்னாசி நல்லூர் அம்மனும் கோவில் கொண்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம், தென்பெண்ணை யாற்றின் வடகரையில் உள்ளது அரகண்ட நல்லூர் அம்மன் கோவில்.
- சேகர்
நன்றி நக்கீரன் 
Next
Newer Post
Previous
This is the last post.

Post a Comment

 
Top
Related Posts Plugin for WordPress, Blogger...